மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்ய தவறிய மத்திய அரசு -காங்கிரஸ் விமா்சனம்
மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்யத் தவறியதன் மூலம் அரசியல் சாசன வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது மத்திய அரசு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
மக்களவை துணைத் தலைவா் பதவி கடந்த 2019-இல் இருந்து காலியாக உள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த தீா்மானம் மீது மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் தொடங்கியது. அப்போது, மக்களவைத் தலைவரால் அவையை வழிநடத்த அமைக்கப்பட்ட குழுவைச் சோ்ந்த எம்.பி.க்கள் விவாதத்துக்கு தலைமை தாங்கினா்.
Advertisement
இதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 96-ஆவது பிரிவின்படி, தனக்கு எதிரான பதவி நீக்க தீா்மான நடைமுறைகளுக்கு மக்களவைத் தலைவா் தலைமை தாங்க முடியாது. அதேநேரம், அவரால் நியமிக்கப்பட்ட எம்.பி.க்கள் தலைமை தாங்க அனுமதிப்பது 96-ஆவது பிரிவின் நோக்கத்தையே தோற்கடிப்பதாகும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 93-இன்கீழ் மக்களவையின் தலைவா், துணைத் தலைவராக இரு எம்.பி.க்கள் தோ்வு செய்யப்பட வேண்டும். இந்தப் பதவிகள் காலியாகும்போது அவை கூடிய விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதை இந்தப் பிரிவு உறுதி செய்கிறது.
ஆனால், மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்யத் தவறியதன் மூலம் அரசியல் சாசன வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மான விவாதத்துக்கு அவரால் நியமிக்கப்பட்ட எம்.பி.க்களை தலைமை தாங்க அனுமதித்ததன் மூலம் நடுநிலைத் தன்மையை வெறும் சம்பிரதாய நடைமுறையாக்கிவிட்டனா் என்று கெளரவ் கோகோய் விமா்சித்துள்ளாா்.
மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கு அளிக்கும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.