முகப்பு
இந்தியா

பாகிஸ்தானுக்காக உளவுப் பார்த்த இந்திய கடற்படை வீரர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தானுக்காக உளவுப் பார்த்த இந்திய கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

Updated On : 11 மார்ச், 2026 at 4:59 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில், பாகிஸ்தானுக்காக உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படை வீரர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் உளவுத் துறையிடம் இந்திய கடற்படையின் ரகசியங்களைப் பகிர்ந்ததாக, ஆக்ராவைச் சேர்ந்த கடற்படை வீரர் ஆதார்ஷ் குமார் (எ) லக்கி உத்தரப் பிரதேச காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆதார்ஷ் குமார், பாகிஸ்தான் உளவுத் துறையிடம் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்யக் கூடிய ஆவணங்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுகளுக்கு ஆதார்ஷ் குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றத்திற்காக அவர் பயன்படுத்திய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆதார்ஷ் குமார் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் முகநூலில் நட்பாகப் பழகிய பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணிடம் இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

An Indian Navy soldier has been arrested by the Anti-Terrorism Squad in Uttar Pradesh on charges of spying for Pakistan.

முழு கட்டுரையைப் படிக்க →