குஜராத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!
2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக குஜராத் அரசு வழங்கிய தரவுகள் பற்றி...
குஜராத் மாநிலத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சட்டப்பேரவையில் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவையில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது பற்றிய தகவல்களை அம்மாநில பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
அதில், குஜராத் முழுவதுமுள்ள 30 மாநிலங்களில் 2,57,269 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதில் 2,11,635 குழந்தைகளுக்கு எடை குறைவு பாதிப்பு உள்ளதாகவும் 45,634 குழந்தைகள் மிகவும் குறைந்த எடையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தரவில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய குறைபாடு அதிகளவு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பஞ்சமல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக பணஸ்கந்தா, கேதா, சபர்கந்தா மாவட்டங்கள் உள்ளன.
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் மட்டுமின்றி வதோதரா, பாவ்நகர், கட்ச் பர்ய்ய்ச் போன்ற மாவட்டங்களும் அகமதாபாத், காந்திநகர், ஆனந்த், மெஹ்சனா போன்ற நகர்ப்புற மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க பாதிப்பு எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளன.
இதில், மிகக் குறைந்த பாதிப்பு கொண்ட மாவட்டங்களாக போர்பந்தர், போடாட், தங் ஆகியவை உள்ளன.
இதனால், குழந்தைகள் நலன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்தாண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.