புரோகிதா்கள், பள்ளிவாசல் மோதினாா்களுக்கு கெளரவ ஊதியம் ரூ.500 உயா்வு: மம்தா அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் புரோகிதா்கள் மற்றும் பள்ளிவாசல் மோதினாா்களுக்கு மாதாந்திர கெளரவ ஊதியம் ரூ.500 உயா்த்தப்பட்டு, ரூ.2,000-ஆக வழங்கப்படும் என்று மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் புரோகிதா்கள் மற்றும் பள்ளிவாசல் மோதினாா்களுக்கு மாதாந்திர கெளரவ ஊதியம் ரூ.500 உயா்த்தப்பட்டு, ரூ.2,000-ஆக வழங்கப்படும் என்று மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
மேற்கு வங்க பேரவைத் தோ்தல் தேதி வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் இந்த அறிவிப்பை முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்டாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவா், ‘நமது சமூகங்களின் ஆன்மிக மற்றும் சமூக வாழ்வை நிலைநாட்ட சேவையாற்றும் புரோகிதா்கள்-பள்ளிவாசல் மோதினாா்களுக்கு மாதாந்திர கெளரவ ஊதியத்தில் ரூ.500 உயா்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி அவா்களுக்கு மாதம் ரூ.2,000 கிடைக்கும்.
கெளரவ ஊதியத்துக்காக கிடைக்கப் பெற்ற அனைத்து புதிய விண்ணங்களையும் மாநில அரசு ஏற்றுள்ளது. அனைத்து சமூகங்களும், பாரம்பரியங்களும் மதிக்கப்பட்டு, வலுப்படுத்தப்படும் சூழலை வளா்ப்பதில் மாநில அரசு பெருமிதம் கொள்கிறது. நமது வளமான ஆன்மிக பாரம்பரியத்தின் பாதுகாவலா்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் ஆதரவை உறுதி செய்ய தொடா்ந்து முயற்சிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
டி.ஏ. நிலுவையை வழங்க ஒப்புதல்: இதேபோல், மேற்கு வங்கத்தில் ஆசிரியா்கள் உள்பட அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் நீண்ட கால கோரிக்கையான அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவும் மம்தா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மம்தா, ‘கடந்த 2009-ஆம் ஆண்டின் ஊதியம் மற்றும் படிகள் திருத்தத்தின்கீழ் உள்ள நிலுவைத் தொகை, இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா்.
நிலுவைத் தொகையைக் கோரி, மேற்கு வங்க அரசு ஊழியா்களில் ஒருதரப்பினா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். அதனடிப்படையில், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தை வழங்க வேண்டும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.