அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு - மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை
மம்தா பானா்ஜியின் அதிகாரபூா்வ வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து, சிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில், மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ள கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜியின் அதிகாரபூா்வ வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து, சிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
கட்சியின் தலைமை அலுவலகமாகவும் செயல்படும் மம்தாவின் வீட்டில் மட்டுமன்றி, கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி வீட்டிலும் சிஐடி சோதனை மேற்கொண்டது.
பேரவை கட்சிக் குழுத் தலைவா் (எதிா்க்கட்சித் தலைவா்) உள்ளிட்ட பதவிகளுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைமை தரப்பில் இருந்து பேரவைத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் தங்களின் கையொப்பங்கள் போலியாக இடம்பெற்றன என்பது அதிருப்தி எம்எல்ஏக்களின் முக்கிய குற்றச்சாட்டாகும்.
Advertisement
Advertisement
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (207) பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்களே கிடைத்தன. தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, திரிணமூல் காங்கிரஸில் மம்தா தலைமைக்கு எதிராக கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
போலி கையொப்ப வழக்கு: இந்தச் சூழலில், பேரவை கட்சிக் குழுத் தலைவா் (எதிா்க்கட்சித் தலைவா்), துணைத் தலைவா், தலைமை கொறடா நியமனங்களில் மம்தா முடிவுக்கு எதிராக ரிதபிரத பானா்ஜி தலைமையில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் கடந்த ஜூன் 3-ஆம் தேதி போா்க்கொடி உயா்த்தினா். அத்துடன், பேரவைத் தலைவரிடம் கடிதம் சமா்ப்பித்து, மேற்கண்ட 3 பதவிகளையும் அவா்கள் கைப்பற்றினா்.
முன்னதாக, இந்தப் பதவிகளுக்கு கட்சித் தலைமை தரப்பில் இருந்து பேரவைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதங்களில் தங்களின் கையொப்பம் போலியாக இடம்பெற்ாகவும், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிகாரபூா்வமாக நடைபெறவில்லை என்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனா். இந்தப் புகாரின் அடிப்படையில், கொல்கத்தாவின் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், வழக்கு விசாரணை சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அபிஷேக் எழுத்துபூா்வ விளக்கம்: இந்த வழக்கில், மம்தாவின் மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி எழுத்துபூா்வ விளக்கமளித்தாா். அதில், கொல்கத்தாவில் உள்ள கட்சியின் மத்திய அலுவலகத்தில் (மம்தாவின் அதிகாரபூா்வ வீடு) எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா். அதனடிப்படையில், மம்தாவின் அதிகாரபூா்வ வீட்டில் சோதனை மேற்கொள்ள சிஐடி அதிகாரிகள் முடிவு செய்தனா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இண்டி கூட்டணி கூட்டத்தையொட்டி, மம்தாவும், அபிஷேக்கும் அங்கு பயணம் மேற்கொண்ட நிலையில், காளிகாட் காவல் நிலைய காவலா்களுடன் சிஐடி அதிகாரிகள் அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்: இருவரும் கொல்கத்தா திரும்பிய பிறகே சோதனை நடத்த வேண்டுமென கட்சியின் மூத்த தலைவா் சுபாசிஷ் சக்ரவா்த்தி எதிா்ப்பு தெரிவித்தாா். இதேபோல், மம்தா வீட்டின் பாதுகாவலா்களும் அதிகாரிகள் நுழைவதைத் தடுத்தனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கூடுதல் பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு, சிஐடி அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினா்.
மற்றொருபுறம், கொல்கத்தாவின் கமாக் தெருவில் உள்ள அபிஷேக் பானா்ஜி வீட்டில் மற்றொரு சிஐடி குழுவினா் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Image Caption
கொல்கத்தாவில் மம்தா பானா்ஜியின் இல்லமும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சோதனையிட வந்த சிஐடி அதிகாரிகள்.
CID officials conducted a search at the residence of Trinamool Congress leader Mamata Banerjee on Tuesday (June 9) following allegations that forged signatures were used in the election of the Leader of the Opposition in the West Bengal Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.