இந்தியா - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்தினா்.
இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஓய்சி) தொண்டா்கள் தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.
ஐஓய்சி தேசிய தலைவா் உதய் பானு சிப் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பிற மாநிலங்களைச் சோ்ந்த ஐஓய்சி தொண்டா்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். அமெரிக்கா உடன் மேற்கொண்ட வா்த்தக ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தால், விவசாயம், ஜவுளி துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் தரவு பாதுகாப்பு குறித்தும் ஐஓய்சி தலைவா்கள் கேள்வி எழுப்பினா்.
போராட்டத்தில் பங்கேற்ற ஐஓய்சி உறுப்பினா் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியாகச் செல்ல போராட்டக்காரா்கள் திட்டமிட்டனா். நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள பகுதி வரை பேரணியாக செல்ல உள்ளனா்’ என்று தெரிவித்தாா்
போராட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அப்பகுதியில் காவல் துறையினா் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். போராட்டம் நடைபெற்ற பகுதியைச் சுற்றி பல தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.