80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் குஜராத் வந்தடைந்த ஜக் லாட்கி கப்பல்!
80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் குஜராத் வந்தடைந்த ஜக் லாட்கி கப்பல் குறித்து...
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த 'ஜக் லாட்கி' கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த சரக்கானது கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து ஏற்றப்பட்டது.
இந்தக் கப்பல், ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்தபோது எண்ணெய் முனையம் தாக்கப்பட்டாலும், கப்பலுக்கும் அதில் இருந்த இந்திய ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதியானது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 28 இந்திய சரக்கு கப்பல்களும் அப்பகுதியில் சிக்கின.
இந்த நிலையில், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மோசமான சூழலை எட்டியது. இதனையடுத்து, மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒவ்வொரு கப்பலாக இந்தியா வந்தடைந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய இரண்டு கப்பல்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக, ஜக் லாட்கி கப்பல் குஜராத் வந்தடைந்துள்ளது.
மேலும், இதன்மூலம் இந்தியாவில் நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.