குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
குஜராத், டாமனில் ரூ. 21,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைப்பது குறித்து...
குஜராத் மற்றும் டாமனில் ரூ. 21,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.
பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) குஜராத் மாநிலம் மற்றும் டாமனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில், போக்குவரத்து, சுகாதாரம், எரிசக்தி, கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில், நாளை மதியம் 2.30 மணியளவில் குஜராத்தின் சூரத் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி செல்வதாகவும், அங்கு சுமார் ரூ. 18,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பயணத்தில், வதோதரா மற்றும் மும்பை இடையிலான 8 வழிச்சாலையின் சில முக்கிய பகுதிகளை மக்களின் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.
மேலும், உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கும், பழங்குடியினர் பகுதிகளுக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 56-ன் முக்கிய பகுதிகளை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசமான டாமனுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு நமோ விமான நிலையத்தின் புதிய முனையத்தையும், நமோ மருத்துவமனையையும் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கிறார்.
இத்துடன், டாமனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அங்கு ரூ. 2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடக்கி வைக்கிறார்.
இதில், லட்சத்தீவின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் முயற்சியாக ரூ. 885 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.