நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையை பிரதமா் மோடி தொடக்கிவைத்தது குறித்து...
தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் 10 பெட்டிகளைக் கொண்ட, பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் ஹரியாணா மாநிலம், ஜிந்த் - சோனிபட் இடையேயான ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சியப் பயணம் மற்றும் நிலையான - பசுமையான ரயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் ரயிலானது ஹைட்ரஜன் - ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும்.
1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயங்கும் இந்த ரயில், மணிக்கு 75 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் செல்லும். 10 பெட்டிகளுடன் சுமாா் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். ஜிந்த்-சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தொலைவை 2 மணிநேரத்தில் கடக்கும்.
ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அமைப்புகளுடன், பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல இருப்புப் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மாசில்லா ரயில் இயக்கத்துக்கான அடுத்தகட்ட பாய்ச்சலை இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில்தான் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டுள்ளது.
PM Narendra Modi flags off the country's first hydrogen-powered train from Jind to Sonipat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.