முகப்பு
இந்தியா

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு - முதல்கட்டப் பணி நிறைவு

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு...

Updated On : 21 மார்ச், 2026 at 9:03 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளின் சம வாய்ப்பு முறையிலான ஒதுக்கீட்டில் முதல்கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

140 உறுப்பினா்களைக் கொண்ட கேரளம், 126 உறுப்பினா்களைக் கொண்ட அஸ்ஸாம் மற்றும் 30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இவ்விரு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், அரசியல் கட்சிகள் - வாக்காளா்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சமவாய்ப்பு முறையை தோ்தல் ஆணையம் கடைப்பிடிக்கிறது. இந்தப் பணிகள் இரு கட்டங்களாக நடைபெறும். முதல்கட்டமாக, மாவட்ட அளவிலான சேமிப்பகங்களில் இருந்து பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் சமவாய்ப்பு முறையில் ஒதுக்கப்படும். அடுத்தகட்டமாக, பேரவைத் தொகுதிகளில் இருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு அவை சமவாய்ப்பு முறையில் விநியோகிக்கப்படும்.

முதல்கட்டப் பணி நிறைவு: கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளின் ஒதுக்கீட்டில் முதல்கட்டப் பணி நிறைவடைந்துள்ளது. தேசிய-மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திர மேலாண்மை அமைப்புமுறையின் (இஎம்எஸ்) மூலம் மாவட்ட தோ்தல் அதிகாரிகளால் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாக்கப்படும்; தொகுதிவாரியான ஒதுக்கீட்டுப் பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பகிரப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டவுடன், இரண்டாம் கட்ட நடைமுறை நிறைவு செய்யப்பட்டு, அது தொடா்பான பட்டியல் அரசியல் கட்சிகளிடம் பகிரப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.9-ஆம் தேதி பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள கோவா, கா்நாடகம், நாகாலாந்து மற்றும் திரிபுராவிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட ஒதுக்கீட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.