தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று தில்லி சட்டப்பேரவைக்கு!
தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றி..
தில்லியில் ரேகா குப்தா பட்ஜெட் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,
சட்டப்பேரவை வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த மிரட்டல் காலை 7.28 மணியளவில் சட்டப்பேரவை மின்னஞ்சலுக்கும், அதைத்தொடர்ந்து 7.49 மணியளவில் அவைத் தலைவர் விஜேந்தர் குப்தாவிற்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவல் கிடைத்த நிலையில், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனைகளைத் தொடங்கினர். மேலும் இதுகுறித்து விசாரணையையும் முடுக்கிவிட்டனர். சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தியுள்ளோம்.
சட்டப்பேரவை வளாகத்தில் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டதாக, வடக்குப் பகுதி துணை ஆணையர் ராஜா பந்தியா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த மின்னஞ்சலில், துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து, முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் அமைச்சரவை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறியக் காவல்துறையும் பாதுகாப்பு முகமைகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளன. அதேவேளையில், நாச வேலைகளைத் தடுப்பதற்கான விரிவான சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.