பிரதமரின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
பிரதமர் மோடியின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து...
பிரதமர் மோடியின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது கைது செய்யப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, ’ஆர்ட் ஆஃப் லிவிங்’ அறக்கட்டளையின் 45 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (மே 10) பெங்களூருக்கு வந்தார். அப்போது, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து, சிறிது நேரம் விழா நடைபெற்ற பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து முடிந்து ஒரு நாள் கழித்து, அது ஒரு பொய்யான மிரட்டல் என்றும், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்றும் நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் திங்கள்கிழமை (மே 11) தெரிவித்தார்.
Advertisement
இந்த சம்பவம் குறித்து சீமந்த் குமார் சிங் தெரிவித்ததாவது:
“அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை சுமார் 8.29 மணியளவில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது.
அதில் அந்த நபர், பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி நடைபெறும் ’ஆர்ட் ஆஃப் லிவிங்’ அறக்கட்டளை வளாகத்திற்கு அருகே வெடிகுண்டு வைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், அந்த வெடிபொருளை வெடிக்கச் செய்துவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.
மிரட்டல் அழைப்பை விடுத்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டார். இருப்பினும், தொழில்நுட்பக் கண்காணிப்பைப் பயன்படுத்தி அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து, ஒரு மணி நேரத்திற்குள் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.