ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
எஸ்.சி. அந்தஸ்து குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பற்றி...
ஹிந்து, பெளத்தம் மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதி (எஸ்.சி.) அந்தஸ்துக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களுக்கு மாறும் பட்சத்தில், அவர்கள் எஸ்.சி. அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் சிந்தாதா ஆனந்த் என்பவர், சாதி ரீதியில் ராமிரெட்டி என்பவர் தன்னை துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தை ராமிரெட்டி நாடியுள்ளார். அவரது மனுவில், கிறிஸ்தவ மதத்துக்கு ஆனந்த் மாறியதால், பட்டியல் சாதி அந்தஸ்தை இழந்துவிட்டார். தனால் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், சாதி வேறுபாடுகள் இல்லாத கிறிஸ்தவ மதத்துக்கு ஆனந்த் மாறியதால், அவர் பட்டியல் சாதி (எஸ்.சி.) அந்தஸ்தை இழந்துவிட்டார். அவரது சாதிச் சான்றிதழ் காலாவதியாகிவிட்டது எனத் தெரிவித்து, முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், ”ஹிந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார். வேறு மதத்திற்கு மாறுவதால் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க நேரிடும்” எனத் தெரிவித்தனர்.