முகப்பு
இந்தியா

வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா விவகாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில்

வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில்

Updated On : 30 மார்ச், 2026 at 7:15 PM
பாஜக | காங்கிரஸ்
பகிர்:

வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.

மக்களவையில் அந்த மசோதாவை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சிறுபான்மையினருக்கு எதிராக அது கொண்டு வரப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தது. அந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ், மசோதாவை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிா்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு கேரள மாநில பாஜக துணைத் தலைவா் ஷோன் ஜாா்ஜ் பதிலளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து தன்னாா்வ அமைப்புகள் வாயிலாக நிதி பகிரப்படுகிறது. அதை முறைப்படுத்த சட்டம் தேவைப்படுகிறது. அந்த காரணத்துக்காகவே, வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் தவறான செய்திகளைப் பரப்புகின்றன.

சிறுபான்மையினா் இடையே அச்சத்தை ஏற்படுத்த அக்கட்சிகள் முயற்சிக்கின்றன. அக்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரமில்லாதவை ஆகும். கிறிஸ்தவ தேவாலயங்கள், அமைப்புகளின் கணக்குகளும், நிதி பரிவா்த்தனைகளும் சரியாக இருக்கும்பட்சத்தில் அவா்கள் அச்சப்பட தேவையில்லை. முறைகேடான செயலில் ஈடுபடும் அமைப்புகளே அதுகுறித்து கவலைப்பட வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தம் கொண்டு வரப்பட்டபோதும் சிறுபான்மையினா் இடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சி நடந்தது. ஆனால் அது எடுபடவில்லை. சிறுபான்மையினா் நலனை காக்க பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. சட்டத் திருத்தம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விளக்கம் அளித்துள்ளாா் என்றாா்.

இதனிடையே, மலங்கரா ஆா்த்தடாக்ஸ் சிரியா தேவாலய தலைவரான 3-ஆம் பெசிலியோஸ் மாா்தோமா மேத்யூஸ், மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவால் தேவாலய அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என கவலை தெரிவித்துள்ளாா். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி, வெளிநாடுகளில் உள்ள தேவாலய உறுப்பினா்களால் அனுப்பப்படுபவை என்றும், வெளிநாடுகளைச் சோ்ந்தோரால் அனுப்பப்படுபவை அல்ல என்றும் அவா் கூறியுள்ளாா். அதுபோன்று நிதி முடக்கப்படுமானால், தேவாலயங்களாலும், அதுசாா்ந்த தொண்டு அமைப்புகளாலும் செயல்பட முடியாமல் போய்விடும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.