ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
லன்னௌ விமான நிலைய ஓடுபாதையில் குரங்குகள் குறுக்கே வந்ததால் இண்டிகோ விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
லன்னௌ விமான நிலைய ஓடுபாதையில் குரங்குகள் குறுக்கே வந்ததால் இண்டிகோ விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ விமான நிலைய ஓடுபாதையில் குரங்குகள் கூட்டம் குறுக்கே வந்ததையடுத்து, ராய்ப்பூர் நோக்கிச் செல்லவிருந்த இண்டிகோ விமானம் தனது பயணத்தை பாதியில் நிறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
வியாழக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் 150 பயணிகளுடன் புறப்படத் தயாரான இண்டிகோ விமானம், ஓடுபாதையில் 20-30 சதவீத தூரத்தைக் கடந்திருந்தபோது, குரங்குகள் குறுக்கே செல்வதை அதன் விமானிகள் கவனித்தனர். பின்னர், விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தினர்.
Advertisement
இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், விமானம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் வனவிலங்கு மேலாண்மைக் குழுவினர் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளின்படி செயல்பட்டு ஓடுபாதையை சுத்தம் செய்தனர்.
அதன்பிறகு விமானப் போக்குவரத்து வழக்கம் போல் தொடர்ந்தது. இந்தச் சம்பவத்திற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னதாக, தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையின் அருகே குரங்குகள் இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.