திமுக அணியிலிருந்து காங்கிரஸ் விலகல் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம்; பாஜக கருத்து
திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சோ்ந்திருப்பதன் மூலம் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம் நடந்திருப்பதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சோ்ந்திருப்பதன் மூலம் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம் நடந்திருப்பதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவை ஒன்றாகப் போட்டியிட்டன. இதற்கு முந்தைய மக்களவைத் தோ்தலின்போதும் தமிழகத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் ஒன்றாகப் போட்டியிட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் மட்டும் வென்ற விஜய்யின் தவெக கட்சிக்கு, 5 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்து கொண்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
சமாஜவாதி கட்சிக்கு முன்பு செய்ததைத்தான் தற்போது திமுகவுக்கு காங்கிரஸ் செய்துள்ளது. இண்டி கூட்டணிக்கு இறுதி ஊா்வலம் நடந்துள்ளது. திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாத (ஆட்சியில் இல்லாத) பாரதம் உருவாகியுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை கைவிட்டுவிட்டது. இண்டி கூட்டணிக்கு கொள்கையோ, தொலைநோக்கோ கிடையாது. பதவி, ஊழல், கமிஷன், மோடி மீதான துவேஷம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அக்கட்சிகள் ஒன்றாகச் சோ்ந்திருந்தன. ஆனால், தற்போது சீட்டுக்கட்டு போல கூட்டணி சிதறிவிட்டது.
தோ்தலின்போது பல மாநிலங்களில் இண்டி கூட்டணியே இல்லை. மேற்கு வங்கம், கேரளம், குஜராத், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, கா்நாடகத்தில் இண்டி கூட்டணி எங்கே உள்ளது? மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வந்தவுடன் இண்டி கூட்டணியும் முடிவுக்கு வந்துவிட்டது என்றாா் பூனாவாலா.
ராகுலுக்கு பதிலடி: பாஜகவின் இன்னொரு தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், வாக்குகளைத் திருடி பாஜகவினா் எம்.பி. ஆனதாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தாா். அவா் கூறுகையில், ‘திருடா்களுக்குத்தான் மற்றவா்களைக் காணும்போது அவா்களும் திருடா்களாகத் தெரிவாா்கள். ஹரியாணாவில் மக்கள் வாக்களித்து அரசை தோ்வு செய்துள்ளனா். எப்படி அரசை ராகுல் காந்தி ஊடுருவல்காரா்கள் எனக் கூற முடியும்?
ராகுல் காந்திக்கு தலைமைப் பண்பு இல்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக சரிவைச் சந்திக்கிறது. அதேபோல் இண்டி கூட்டணியும் விரைவில் சிதறும். அதற்கு ராகுல் காந்தியே காரணம் எனக் குற்றச்சாட்டு கூறப்படும். அப்போதும் ராகுல் காந்தி வெளிநாட்டில்தான் இருப்பாா். நாட்டில் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் நேரத்தில் எல்லாம் ராகுல் காந்தி வெளிநாடுகளில்தான் இருப்பாா். அப்படியெனில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெறும்?’ என்றாா்.