கேரளத்தின் புதிய முதல்வர் யார்? மும்முனைப் போட்டியில் சிக்கிய காங்கிரஸ்!
கேரளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவு...
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், புதிய முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்குத் தேவையான 71-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியினுள் கேரளத்தின் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயளாலர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஸன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Advertisement
இந்த நிலையில், கேரளத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் 63 சட்டப்பேரவை உறுப்பினர்களில் கே.சி. வேணுகோபால் முதல்வராகப் பதவியேற்க 47 பேரும், வி.டி. சதீஸனுக்கு 10 பேரும், ரமேஷ் சென்னிதலாவுக்கு 6 பேரும் ஆதரவளிப்பதாக, காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து வரும் மே 11 அல்லது மே 12 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், புதிய அமைச்சரவையின் பதவியேற்பு வரும் மே 15 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வி.டி. சதீஸனுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.