காங்கிரஸ் - திரிணமூல் இணைப்பா? கே.சி. வேணுகோபால் பதில்!
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணைவதாக வெளியாகும் தகவலுக்கு கே.சி. வேணுகோபால் பதில்...
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணைவதாக வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
தொடர்ந்து தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட மமதா பானர்ஜி பின்னர் ஜூன் 9 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். தற்போதைய நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் பேசியதையடுத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுமாறு மமதாவிடம் சோனியா காந்தி கோரியுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இணைப்பது குறித்து சோனியா காந்தி, மமதாவிடம் கேட்டதாகவும் அதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று மமதா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்,
"அடுத்த 2-3 மாதங்களில், மாநில மற்றும் மாவட்ட அளவிலும்கூட நாங்கள் ஒரு தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம். மக்கள் எங்கு சிரமங்களை எதிர்கொள்கிறார்களோ, அங்கு காங்கிரஸ் அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு அவர்களுக்காகப் போராடும்.
காங்கிரஸ் -திரிணமூல் காங்கிரஸ் இணைப்பு என்பது முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள். மம்தா பானர்ஜியும் அபிஷேக் பானர்ஜியும் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்தனர்.ஆனால் அது ஒரு வழக்கமான சந்திப்பாகவே இருந்தது. ஏனெனில் திரிணமூல் காங்கிரஸ், இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாகும்" என்றார்.