போட்டியால் திணறும் காங்கிரஸ்! கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிப்பு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிக்கப்படவுள்ளது...
கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா இடையே போட்டி நிலவி வருவதால் கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு இதுவரை பெறுப்பேற்கவில்லை.
Advertisement
இந்த நிலையில், முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் தில்லியில் இன்று (மே 13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து நாளை (மே 14) அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“கேரளத்தின் காங்கிரஸ் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமை அனைத்து ஆலோசனைகளையும் நிறைவு செய்துள்ளது. கேரளத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த முடிவு நாளை அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.