5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு!
5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முழுவதும் விலக்கி கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களை அறிவிக்கவும் அரசுக்கு இனி எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புதுவை யூனியன் பிரதேசம் மற்றும் குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில இடைத் தேர்தல் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
Advertisement
இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வந்தனர்.
இதனிடையே, வாக்குப் பதிவு முடிந்த மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், 5 மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முழுவதும் விலக்கி கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் இனி வழக்கம்போல அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர்.
தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தன. சுவர் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் மே 6-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றன. இதனால் சிலைகளின் மீது மூடப்பட்டிருந்த துணிகளை மாநகராட்சி ஊழியர்களால் புதன்கிழமை அகற்றப்பட்டன.
ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் ஃபால்டா பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அங்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.