பிகாரில் நிதிஷ்குமாரின் மகன் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்பு!
பிகார் அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர்கள் பதவியேற்பு பற்றி..
பிகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
மாநிலத்திலுள்ள ஐந்து கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மொத்தம் 31 பேருக்கு, ஓய்வு பெற்ற துணைநிலை ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிஷாந்த் குமார், முன்னாள் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா ஆகியோரைத் தவிர, முன்னாள் அமைச்சர்களான ஷ்ராவண் குமார், அசோக் சௌத்ரி ஆகியோரும் சாம்ராட் சௌத்ரியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Advertisement
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதிஷ் குமார் மற்றும் மாநிலத்தில் ஆளும் என்டிஏ கூட்டணியின் பிற மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த மாதம் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் சாம்ராட் சௌத்ரி அப்பதவியை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், பிகாரில் அரசை வழிநடத்தும் முதல் பாஜக தலைவர் என்ற பெருமையை சௌத்ரி பெற்றார். இவரைத் தலைமையாகக் கொண்டு பாஜக தலைமையிலான அரசு அமைக்கப்பட்டது.
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத் தவிர, பிகாரில் உள்ள என்டிஏ கூட்டணியில், மத்திய அமைச்சர்களான சிராக் பஸ்வான், ஜித்தன் ராம் மாஞ்சி ஆகியோர் முறையே தலைமையேற்கும் எல்ஜேபிஆர்வி மற்றும் எச்ஏஎம் ஆகிய கட்சிகளும், மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எம் கட்சியும் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்ற நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், இந்தக் கூட்டணியின் சிறிய கட்சிகளுக்கு உரியப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக அமைந்த புதிய அமைச்சரவையிலும் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று அக்கட்சிகள் காத்திருக்கின்றன.