புதுச்சேரி அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள்!
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன.
Advertisement
Advertisement
அமைச்சரவைப் பதவிகள் பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 2 அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர் பதவி வழங்க பாஜக கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரங்கசாமி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மே 13 அன்று ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் நமச்சியாவம் (பாஜக) , மல்லாடி கிருஷ்ணராவ் (என்.ஆர். காங்கிரஸ்) ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 3 அன்று அமைச்சரவை விரிவாக்கத்திற்காக ஆளுநர் கைலாஷ்நாதனைச் சந்தித்து ரங்கசாமி கடிதம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். ராஜவேலு (என்.ஆர். காங்கிரஸ்), சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்), ராஜசேகரன் (பாஜக) ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். புதிய அமைச்சர்கள் 3 பேரும் ஜூன் 17 அன்று பதவியேற்கின்றனர்.