புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஏன்? அதிகாரத்துக்காக போட்டி!
புதுவை அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதம் பற்றி...
புதுவை தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்களாகியும் முழு அமைச்சரவையை அறிவிக்க முடியாமல், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திணறி வருகின்றது.
30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன.
Advertisement
Advertisement
புதுச்சேரி சட்டப்பேரவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவராக என். ரங்கசாமி தோ்வு செய்யப்பட்டாா். தொடர்ந்து, மே 13 ஆம் தேதி முதல்வராக ஐந்தாவது முறையாக என். ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாஜகவைச் சோ்ந்த மண்ணாடிபட்டு எம்எல்ஏ ஆ. நமச்சிவாயம், என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏனாம் தொகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம்
இந்த நிலையில், முதல்வரும், இரு அமைச்சர்களும் பொறுப்பேற்று 14 நாள்களாகியும் துறைகள் ஒதுக்கப்படாததால், அரசுப் பணிகள் தொய்வடைந்துள்ளது.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் பதவி, 3 அமைச்சா்கள் யாா், யாா்? என்பதிலும், எந்தக் கட்சிக்கு அமைச்சா் பதவியை ஒதுக்குவது என்பது குறித்தும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக இடையே குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுகவும், லஜகவும் தலா ஒரு அமைச்சர் பதவியைக் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் தில்லி பயணம் மேற்கொண்ட பாஜக அமைச்சர் நமச்சிவாயம், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்களை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சரவை விரிவாக்கம், சட்டப்பேரவை நியமன உறுப்பினர்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக தலைமை ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் பதவி, உள்துறை போன்ற முக்கிய துறைகள் யாருக்கு? உள்ளிட்ட விவகாரத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே நிலவும் போட்டியால் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய நலத்திட்டப் பணிகள், அரசு நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
Why the delay in the expansion of the Puducherry Cabinet?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.