உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!
உத்தரப் பிரதேசத்தில் 36 மணிநேரத்தில் காவல் துறையினர் நடத்திய 8 என்கவுன்டர்கள் குறித்து...
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், 36 மணிநேரத்துக்குள் காவல் துறையினர் நடத்திய 8 என்கவுன்டர் நடவடிக்கைகளில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முசாபர்நகர் மாவட்டத்தில், கொள்ளை, வழிப்பறி, கால்நடை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, 8 என்கவுன்டர் நடவடிக்கைகளை அம்மாநில காவல் துறையினர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் மூலம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களில் 10 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முசாபர்நகரின் புதானா, மன்சூர்பூர், நை மண்டி மற்றும் ஷாஹ்பூர் காவல் நிலையங்களின் பகுதிகளில் நடைபெற்றதாகவும், இதுபற்றிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் கால்நடை கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது பசுவதையைத் தடுப்பதாகக் கூறி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.