அரசு நிலத்தில் கட்டப்பட்ட மதரஸா இடிப்பு!
உத்தரப் பிரதேசத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மதரஸா புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மதரஸா புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் கோடா நகரில் பக்ரீத் பண்டிகை அன்று சூர்யா சவுகான் என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்கவும் காசியாபாத் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கோடா பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருந்த மதரஸா கட்டிடம் அரசு இடத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கோடா பகுதியில் உள்ள 3 மதரஸாக்களுக்கு மாவட்ட நிர்வாகம் நேற்று (ஜூன் 2) நோட்டீஸ் அனுப்பி, அவற்றில் இரண்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று ஒரு மதரஸா இடிக்கப்பட்டுள்ளது.
மதரஸாவை இடிக்கும் நடவடிக்கையின்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாக காவல்துறை மற்றும் விரைவுப் படையைச் சேர்ந்த 850 வீரர்கள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"முதல்வரின் வழிகாட்டுதலில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டவிரோத செயல்கள் பற்றி கண்காணிக்கப்பட வேண்டும். காவல்துறை 'ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்' என்ற நடவடிக்கையின் கீழ் சொத்துகள், வாடகைதாரர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, மதரஸா வாரியத்திலோ அல்லது சிறுபான்மையினர் நலத்துறையிலோ பதிவு செய்யாத 3 மதரஸாக்களை நாங்கள் கண்டறிந்தோம். கோடா பகுதியில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை காசியாபாத் முழுவதும் விரிவுபடுத்தப்படும். அனைத்து சட்டவிரோதச் செயல்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் ரவீந்தர் குமார் தெரிவித்தார்.
இதுபற்றி மதரஸா நிர்வாகி ஹாஜி ரஃபிக் மாலிக் பேசுகையில், ”மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்து ஒரு அறிவிப்பாணையை வழங்கி மதரஸா வளாகத்திற்கு சீல் வைத்தனர். இப்போது எங்களுக்கு விடுமுறை காலம் என்பதால், வெளியூர்களிலிருந்து வந்த பல குழந்தைகள் இங்கு தங்கியுள்ளனர். இந்த மதரஸா 2000-ஆம் ஆண்டில் மீரட்டில் பதிவு செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளன” என்று தெரிவித்தார்.
A madrasa built on government land in Uttar Pradesh was demolished using a bulldozer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.