சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: 3 பேர் கைது!
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ராத் கொலை தொடர்பாக..
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ராத் கொன்றவர்கள் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மத்யம்கிராம் பகுதியில் மே 6-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தக் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் ஞாயிறன்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், தொழில்நுட்பக் கண்காணிப்பு, டிஜிட்டல் தடமறிதல் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உறுப்பினர்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாருக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அடையாளங்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் மூன்று பேரை கைது செய்தனர்.
Advertisement
கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர், பிகார் பக்ஸ்ர் மாவட்டத்தின் பாண்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த விஷால் ஸ்ரீவஸ்தவா, மற்ற இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் ஒருவர் துல்லியமாகச் சுடும் நிபுணத்துவம் பெற்றுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலையை எட்டு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு நிறைவேற்றியதாக, உதவியாளரை இலக்காகக் கொள்வதற்கு முன்னதாக, தாக்குதல் நடத்தியவர்கள் விரிவான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் அடையாளங்களையும் நடமாட்டத்தையும் மறைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மத்யம்கிராம் சந்திப்புக்கு அருகிலுள்ள தோஹாரியா பகுதியில், உதவியாளர் சென்ற வாகனத்தை ஒரு கார் வழிமறித்ததாகவும், அதே நேரத்தில் இருசக்கர வாகனம் அந்த வாகனத்தின் பக்கவாட்டில் வந்து நின்றதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கார், கொலை நடப்பதற்கு முன்பாக பாலி சுங்கச்சாவடியைக் கடந்து சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சந்தேக நபர்களில் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு, மத்யம்கிராமில் உதவியாளர் சந்திரநாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மீதமுள்ள சந்தேக நபர்களைக் கண்டறிய, சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கு வங்கம் முழுவதும் பல பகுதிகளில் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.