பிரதமரின் 'அனைவருக்குமான வளர்ச்சி' வழிகாட்டும் கொள்கையாகத் திகழ்கிறது: மே.வ. முதல்வர்
புதிய பாஜக அரசுக்கு வழிகாட்டும் கொள்கை பற்றி முதல்வர் கூறுவது..
பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்குமான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வை மாநிலத்தில் அமைந்த புதிய பாஜக அரசுக்கு வழிகாட்டும் கொள்கையாகத் திகழும் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.
கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி.. எங்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நாங்கள் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
அதன்பிறகு, முதல்வர் சுவேந்து அதிகாரி, கட்சியின் மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யாவுடன் இணைந்து, கொல்கத்தாவின் கிழக்குப்பகுதியில் உள்ள சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற கட்சி அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
Advertisement
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பட்டாச்சார்யா,
அரசு மற்றும் கட்சி ஆகிய இரண்டும் தத்தமது பொறுப்புகளைத் தனித்தனியே நிறைவேற்றினாலும், மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
பிரதமர் மோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ் (அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வைதான் எங்களுக்கு வழிகாட்டும் கொள்கையாக அமையும் என்று கூறினார்.
சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப்படமும், பாரத மாதாவின் படமும் அங்கு இடம்பெற்றிருந்தன.
கட்சி அலுவலகத்திற்கு ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டும் வகையில் 207 தாமரை மலர்களைக் கொடுத்துக் கட்சித் தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பிதான்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சரத்வத் முகர்ஜி உள்ளிட்ட பல பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும், லாக்கெட் சாட்டர்ஜி மற்றும் சௌமித்ரா கான் போன்ற கட்சித் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.