மேற்கு வங்க பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு!
மேற்கு வங்கத்தில் பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து...
மேற்கு வங்கத்தில் 18 ஆவது பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பேரவையில் ரதீந்திர போஸ்-இன் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இடைக்கால பேரவைத் தலைவர் தபஸ் ராய், குரல் வாக்கெடுப்பை நடத்தினார்.
அப்போது, பாஜக சார்பில் வெற்றிபெற்ற 207 உறுப்பினர்களும் ஒருமனதாக ரதீந்திர போஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பேரவைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் உள்ளார்.
Advertisement
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலமாக, திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பாஜக ஆட்சி அமைத்தது.
புதிதாக பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு அரசு அதிகாரிகள் இடமாற்றம், பள்ளிகளில் நாள்தோறும் கடவுள் வாழ்த்தாக வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் போன்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.