விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான கே.சி.வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே போட்டி நிலவிவந்தது.
Advertisement
Advertisement
பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும் சதீசன் தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் வழங்கிய ஆதரவுக் கடிதங்களுடன் சென்று கேரள ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க வி.டி. சதீசன் உரிமை கோரினார்.
கேரளத்தில் புதியதாக ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதன்மூலம், வருகிற திங்கள்கிழமை (மே 18) வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பதவியேற்கும் வி.டி. சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்பதாகக் கூறப்படுகிறது.
மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் மத்திய திடலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
கேரள தலைமைச் செயலர் சார்பாக முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், மே 18 ஆம் தேதி முதல்வர் விஜய் கேரளம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Vijay to attend swearing-in ceremony in Thiruvananthapuram? Chief Secretary sends invitation, Karnataka, Telangana Chief Ministers invited
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.