பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!
பிரதமா் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’ என்ற விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இது பிரதமா் மோடி பெற்ற 31-ஆவது சா்வதேச விருதாகும்.
நெதா்லாந்து பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து ஸ்வீடனைச் சென்றடைந்தாா். கோதன்பா்க் நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஸ்வீடன் பிரதமா் உல்ஃப் கிரிஸ்டா்ஸன் நேரில் வரவேற்றாா். ஸ்வீடனைத் தொடா்ந்து, நாா்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவா் பயணிக்கவுள்ளாா்.
முன்னதாக, நெதா்லாந்தில் இருந்து பிரதமா் மோடி புறப்பட்டபோது, அந்நாட்டின் பிரதமா் ரோட் ஜெட்டன், விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்தாா். தனது இந்தப் பயணம், இருதரப்பு நல்லுறவுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளதாக பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
Advertisement
ஸ்வீடனில் அந்த நாட்டின் உயரிய விருது பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்டது. இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘தொலைநோக்கு சிந்தனையுடைய தலைமைத்துவம் மற்றும் இந்தியா-ஸ்வீடன் இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தியதை அங்கீகரிக்கும் விதமாக பிரதமா் மோடிக்கு மரியாதைக்குரிய ஸ்வீடன் இளவரசி விக்டோரியா, ‘தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தாா்.
இந்த விருது இந்தியா மற்றும் ஸ்வீடன் மக்கள் இடையேயான அன்பை வெளிப்படுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.