உ.பி.யில் பகலிலும் மின்வெட்டு: மக்கள் போராட்டம்!
உ.பி.யில் வெப்ப அலைக்கு மத்தியில் பகலிலும் மின்வெட்டு...
லக்னௌ : பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் பகலிலும் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் லக்னௌ மட்டுமில்லாது மீரட், கோண்டா மற்றும் ஏனைய ஊரக மாவட்டங்களிலும் எம்எல்ஏக்கள், மேயர்கள் மற்றும் பிற அரசு நிர்வாக உயர் பதவி வகிப்பவர்கள் இல்லங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அம்மாநில மின்சார துறை அமைச்சர் ஏ. கே. சர்மா பேசும்போது, “ மின் விநியோகத்தை சீராக்கவும் வரலாறு காணாத மின் தேவையை சமாளிக்கவும் மாநில மின்சார கழகம் தங்களால் இயன்ற ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருவதாக” குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
மின் தடையால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் அரசுக்கு நெருக்கடி அளித்து வருவதை உ.பி.யில் பார்க்க முடிகிறது.
இத்தகைய பிரச்சினைகளில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குடிமக்கள் அரசை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே தவிர அவர்களை இருளில் தவிக்க விடுவதற்காக அல்ல என்று மின்சார துறை அமைச்சருக்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, உ.பி. மின் வாரிய உயரதிகாரியொருவர் தெரிவித்திருப்பதாவது :
“ஊரகப் பகுதிகளுக்கு 18 மணி நேர மின் விநியோகம் என்பதே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் வெறும் 5 - 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கக்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணங்கள், தொடர் பழுதுகள் ஏற்படுவதும், பழுதுகளைச் சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதுமே.
மின்சார உற்பத்தி குறைவால் மட்டுமே மின் தடை பிரச்சினை ஏற்படவில்லை என்றும், மின் விநியோகத்திலும் பராமரிப்பு பணிகளிலும் பிரச்சினைகள் நிலவுவதால் மின் தடை பூதகரமாக வெடித்துள்ளது.
உ.பி. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்திருப்பதாகவும், அதில், மின் தடை அதிகரிப்பதற்கு வெப்பநிலை உயருவதும் ஒப்பந்தத் தொழிலாளர் பற்றாக்குறையுமே காரணமாகியிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்” தெரிவித்தார்.