தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
தமிழகத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...
தமிழகத்தில் சில இடங்களில் வேண்டுமென்றே சிலர் மின்தடையை ஏற்படுத்துவதாகவும் மின்வெட்டு புகார் வந்தவுடன் உடனடியாக சரிசெய்யப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்வெட்டு குறித்த புகார்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்கையில்,
Advertisement
Advertisement
"மின்வெட்டு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கு மின்தடை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சரிசெய்யப்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பூரில் மின்வெட்டு ஏற்பட்டவுடன் 40 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு விட்டாலும், சிலரின் தூண்டுதலின்பேரில் போராட்டம் நடந்தது. மின்வெட்டு ஏற்பட்டவுடன் தெருவில் சென்று நிற்கக் கூறுகின்றனர். இதேபோல அரும்பாக்கத்திலும் உடனடியாக சரிசெய்யப்பட்டது. திட்டமிட்டு விரும்பத்தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பியூஸ் கேரியர் பிடுங்குவோர் சிலரை சிசிடிவி அடிப்படையில் கைது செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மின்னகம் மூலமாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மின் விநியோகம் தொடர்பான குறைகளைப் போக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. திட்டமிட்டு மின் தடையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தடை தொடர்பாக சிலர் தூண்டுதலின் பேரில் போராட்டம் செய்கின்றனர். ஒரு சிலர் வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்துகின்றனர். பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய நபர்களைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.