தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏன்? மின்வாரியம் விளக்கம்
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது பற்றி மின்வாரியம் விளக்கம்
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்த புகார்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், மின்வாரியம் இதுபற்றிய விளக்கத்தை அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் மின்தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின்தடை ஏற்படுவதாகவும் அதனைச் சரிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,
Advertisement
Advertisement
"தமிழ்நாட்டில் போதுமான அளவில் மின்சாரம் கிடைக்கிறது. அண்மைக் காலங்களில் மாநிலத்தின் உச்ச மின் தேவை தினசரி 20,000 மெகாவாட்டிற்குக் குறைவாகவே இருந்து வருகிறது. மின் உற்பத்தி, மின்பரிமாற்றம் மற்றும் மின்விநியோக அமைப்புகள் மாநில சுமை ஒழுங்குமுறை மையம் (SLDC), மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு அமைப்பு(SCADA) மையங்கள் மற்றும் கள நிலை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 765 கிலோ வோல்ட், 400 கி.வோ. 230 கி.வோ., 110 கி.வோ., 66 கி.வோ. மற்றும் 33 கி.வோ. நிலைகளில் மொத்தம் 1,910 துணை மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 283 துணை மின்நிலையப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
மாநிலத்தில் சுமார் 39,763 சுற்று கி.மீ. உயர்மின் அழுத்த (EHV) கோடுகள், 2,11,948 கி.மீ. உயரழுத்த (HT) மின் கோடுகள், 6,66,429 கி.மீ. தாழழுத்த (LT) மின் கோடுகள், 4.47 லட்சத்திற்கும் மேற்பட்ட விநியோக மின்மாற்றிகள் மற்றும் 8,312 ரிங் மெயின் யூனிட் (RMU) அமைப்புகள் மூலம் சுமார் 3.51 கோடி நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 38.79 லட்சம் நுகர்வோருக்கு 253 துணை மின்நிலையங்கள், 40,798 விநியோக மின்மாற்றிகள், 16,582 கி.மீ. நிலத்தடி மின்கம்பிகள் மற்றும் 18,092 கி.மீ. மேல்நிலை மின் கம்பிகள் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துணை மின்நிலையங்களில் ஏற்படும் மின்தடை சம்பவங்கள் SCADA அமைப்பின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான மின்தடைகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றிற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
அதிகபட்ச நேரங்களில் உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் ஏற்படும் Fuse Off Calls (FOC)
நிலத்தடி மின்கம்பி பழுதுகள்
ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பு
விநியோக மின்மாற்றி பழுது அல்லது அதிக சுமை
துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் டிரிப்பிங்
மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமான மின்தடைகள்
திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோக நிறுத்தம்
மரக் கிளைகள் மின்கம்பிகளைத் தொடுதல் மற்றும் வெளிப்புற சேதங்கள்
வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் உபகரண அழுத்தம்
தனித்தனி பீடர் மற்றும் ஆர்எம்யு (RMU) தொடர்பான கோளாறுகள்
இத்தகைய பிரச்சினைகளை விரைவாக சரிசெய்ய மொபைல் பராமரிப்பு குழுக்கள் மற்றும் எம்ஆர்டி குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, தற்காலிக களப்பணிக் குழுக்கள் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளன. மின்னகம், ஆன்லைன் சேவைகள் மற்றும் கள அலுவலகங்கள் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு வருகின்றன.
மின்மாற்றிகள், மின்கம்பிகள், சுவிட்ச்சியர் உள்ளிட்ட தேவையான மின் உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. அதிக நுகர்வோர் சுமை மற்றும் நகர வளர்ச்சி காரணமாக மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படும் பகுதிகளில், உயர்திறன் மின்மாற்றிகள் அமைத்தல், புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்குதல், பீடர் பிரித்தல், நிலத்தடி மின்கம்பி வலுப்படுத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
மக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்விநியோகத்தை வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.