நாகையில் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்விலேயே மின்வெட்டு!
நாகப்பட்டினத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்ட நிகழ்வில் மின்வெட்டு ஏற்பட்டது பற்றி...
நாகப்பட்டினத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்ட நிகழ்வில் மின்வெட்டு ஏற்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 9) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. எனினும் எல்இடி திரை வெளிச்சத்தில் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. உடனே மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்வெட்டு சரிசெய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்னை இருந்து வரும் நிலையில், அமைச்சர் ஒருவர் பங்கேற்ற நிகழ்விலேயே மின்வெட்டு ஏற்பட்டது அப்பகுதியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகளுக்கு இணையாக தவெகவினருக்கு இருக்கைகள் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியருக்கு அருகே மாவட்டச் செயலர் சுகுமாரனுக்கு இருக்க வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் மின்வெட்டுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஷாஜகான் கூறுகையில்,
"தமிழ்நாட்டைப் பொருத்தவரை மின்சாரத்தில் எந்தவித தட்டுப்பாடும் நிச்சயமாக கிடையாது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு சில பகுதிகளில் அதிக காற்று வீசியதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அது ஒரு சில மணி நேரங்களில் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்றார்.