ஏமாற்றத்தை வென்றால் வெற்றி!
கி.மு. 350 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னன் தனது மகனுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்தார். தாய் அவனுக்கு அன்போடு, தோல்வியையும் ஏமாற்றத்தையும் தாங்கும் வல்லமையையும், அவன் மன்னனாகி இந்த உலகை வென்றெடுக்க வேண்டும் என்ற லட்சிய விதையையும் விதைத்தாள். மன்னனே என்றாலும், அரசு, அதிகாரம், செல்வம் எதுவும் வருங்கால வாரிசை சோம்பேறியாக்கக் கூடாது என்று கருதிய மன்னன், கல்வி, ஞானம், வீரம், விúவகம், அன்பு, பண்புகளைக் கற்று, சிந்தை தெளிந்து அறிவார்ந்த கல்விமானாகத் தனது மகன் வந்தால்தான், அவனால் நாட்டைக் காக்க முடியும் என்று நிûனத்தார்.
குருவிடம் மகனை அனுப்பினார் மன்னன். ‘‘என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா?’’ என்று குரு கேட்டார். ‘‘எனக்கு ஆசிரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளது என்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது’’ என்று சளைக்காமல் பதில் கூறினான். தாய் தந்தையின் வளர்ப்பு அந்த மாணவனை தைரியமாக, தன்னம்பிக்கையுடன் பேச வைத்தது. உலகாளும் கர்வமும், தன்னம்பிக்கையும் இவனுக்கு குருகுலத்துக்கு வரும் முன்பே இருக்கிறது என்று உணர்ந்தார் ஆசிரியர். பின்புதான் அறிவார்ந்த கல்வியையும், ஞானத்தையும், சாணக்கியத்தனத்தையும், விவேகத்தையும் கற்றுக்கொடுத்தார் அந்த ஆசிரியர்.
அந்த மன்னனுக்கு, அடங்காத கறுப்புக் குதிரை பரிசளிக்கப்படுகிறது. ஒரு சாதாரண குதிரையை விடவும் மிக உயரமாக, 13 மடங்கு அதிக விலையுள்ள, யாருக்கும் அடங்காத கோபத்தோடு, யாரைப் பார்த்தாலும் உறுமிக்கொண்டிருக்கும் அந்தக் குதிரை, திடலில் திமிறிக்கொண்டும், குதித்துக்கொண்டும் இருந்தது. அந்த மன்னன், ‘‘இந்தக் குதிரை வேண்டாம், திரும்ப கொண்டு செல்லுங்கள்’’ என்றார். தனது தாயோடு இந்தச் சம்பவத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் அந்த மன்னனின் மகன். ‘‘நான் இந்தக் குதிரையை அடக்குகிறேன்’’ என்று திடீரென்று எழுந்தான். ‘‘கைதேர்ந்த வீரர்களாலேயே அடக்க முடியவில்லை. நீ சிறுவன், உன்னால் முடியாது, வேண்டாம்’’ என்று தடுத்தார் மன்னர். ஆனால் அவன் கேட்கவில்லை. களத்தில் இறங்கி, குதிரையிடம் சென்றான். கடிவாளத்தைப் பிடித்தான். சூரியனின் திசையை நோக்கித் திருப்பினான். குதிரை அவன் இழுத்த இழுப்புக்கு அடிபணிந்து சென்றது. ஏனென்றால், குதிரை தன் நிழலைப் பார்த்துத்தான் மிரள்கிறது என்பதை உற்று நோக்கி உணர்ந்தான். வீரத்தால் வெல்வதை விவேகத்தால் வென்றான். அந்தக் குதிரைதான், அவன் உலகை வெல்ல அவன் கூடவே இருந்த ஃபுசிபேலஸ். உலகை வென்ற அந்த இளவரசனின் பெயர் மாவீரன் அலெக்ஸாண்டர். அவன் தந்தை கிரேக்க மன்னன் 2-ஆம் பிலிப். தாய் ஒலிம்பியாஸ். ஆசிரியர்தான் கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
‘‘ஒரு மாணவன் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால், அது மூன்று பேரால்தான் முடியும். அவர்கள்தான் ஆன்மிக நம்பிக்கை கொண்ட நல்ல தாய், நல்ல தந்தை மற்றும் முன்னுதாரணமாக வாழும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்’’ என்றார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.
இன்றைய சூழலில் மாணவர்கள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள்? ஒரு சிறு ஏமாற்றத்தை, தோல்வியை அவர்களால் தாங்க முடியவில்லை. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால், நன்றாகப் படித்தும் டாக்டர் ஆக முடியாத சூழல் ஏற்பட்டால், சிறுவயதில் வரக் கூடாத காதல் வந்து அதில் தோல்வி ஏற்பட்டால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காதலை ஏற்க மறுத்த பெண்ணைக் கொலை செய்தல், திராவகம் வீசுதல், தீ வைத்துத் கொளுத்துதல், மாணவர்களும், மாணவிகளும் போதை, குடி, சிகரெட்டுக்கு அடிமையாகும் பல சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன. மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுத்து மேல் படிப்பு புரியாமல் தோல்வி ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்கிற சம்பவங்கள் ஐ.ஐ.டி.-யில்தான் அதிகமாக நடக்கின்றன. ஆசிரியர் கண்டித்தால் தற்கொலை. இப்படி பல சம்பவங்கள் ஏன் நடக்கின்றன?
எனது 6 வயதில் பெரிய மிதிவண்டியின் இடையே காலை விட்டு ஓட்டி பலமுறை கீழே விழுந்து முட்டியில் காயம் பட்ட நாள்கள் ஏராளம். காயத்துக்கு எண்ணெய் போட்டார் அம்மா. ‘‘ஒண்ணும் செய்யாது; மீண்டும் ஓட்டு’’ என்று ஊக்கம் கொடுத்தார் அப்பா. வலியோடு ஓட்டிப் பழகினேன். பெரிய சைக்கிளை எப்படி ஓட்ட வேண்டும் என்று அந்தக் காயங்கள்தாம் எனக்குக் கற்றுக்கொடுத்தன. இன்றைக்கு சின்ன மிதிவண்டியில்கூட கீழே விழக் கூடாது என்று இரு பக்கமும் தாங்கும் சக்கரம் வந்துவிட்டது. காயம் இல்லாமல் தன் குழந்தை சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் என்றைக்குப் பெற்றோர்களுக்கு வந்ததோ? காயத்தின் வலி தெரியாத இளைஞர்கள் இன்றைக்கு பைக்கை அதிவேகமாக ஓட்டி, உயிரை இழக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
குழந்தை செல்பேசி கேட்டு அழுகிறதா, உடனே கொடுத்து நம்மை தொல்லைப்படுத்தாமல் இருந்தால் சரி என்று நினைக்கும் பெற்றோர்தான் குற்றவாளி. செல்பேசியைக் கொடுக்கலாம்; ஆனால் அது குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் கிடைக்கும் என்பதை உணர்த்தத் தவறினால், நீங்கள் அதை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். அழுகை வரும். கோபம் வரும். உடனே தன் குழந்தையை ஏமாற்றக் கூடாது என்று நினைத்து, ‘‘சரி வெச்சுக்கோ’’ செல்போனை குழந்தையிடம் திருப்பிக் கொடுத்து, அதற்கு ஏமாற்றத்தைப் பழகிக் கொடுக்க பெற்றோர்களாகிய நாம் தவறுகிறோம். நாம் நம் குழந்தை ஏமாறக் கூடாது என்று நினைக்க, நினைக்க அந்த ஏமாற்றத்தைத் தாங்கி மீண்டும் எழும் அனுபவத்தை அதற்கு தரத் தவறுகிறோம். சின்ன ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் அனுபவத்தை நாம் குழந்தைகளுக்கு சிறுவயதில் கற்றுக்கொடுக்கத் தவறினால், பெரிய ஏமாற்றத்தை நம் குழந்தைகளால் தாங்கமுடியாத நிலை அவர்கள் பெரியவர்களானதும் ஏற்படும்.
உணவகத்தில் எத்தனை பேர் நம் குழந்தையிடம் பணத்தைக் கொடுத்து, ‘‘இவ்வளவுதான் பணம் இருக்கிறது. இதற்குள் மெனுவை பார்த்து அனைவருக்கும் தேவையான உணவை நீயே வாங்கு’’ என்று கொடுக்கிறோம். எண்ணிப் பாருங்கள். அப்படிக் கொடுத்தால், கஷ்டப்பட்டு சேர்த்த அந்தப் பணத்தின் அருமை அந்தக் குழந்தைக்கு எப்படி தெரியும். ‘‘நான் கஷ்டப்பட்டாலும் என் குழந்தை விரும்பியது எதை வேண்டுமென்றாலும் வாங்கிக் கொடுப்போம்’’ என்று நினைக்கும் பெற்றோர்களால்தான் குழந்தைக்குப் பணத்தின் அருமை தெரியாமல் போகிறது. பின் வட்டிக்கு கடன் வாங்கி அல்லல்படும்போது, அதைத் தாண்டி உழைத்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை இழந்து தற்கொலைதான் தீர்வு என்று எத்தனை பேர் கோழைத்தனமாக முடிவெடுக்கிறார்கள். குழந்தைகள் முன்பு மது, சிகரெட் போதைக்கு பெற்றோர்கள் அடிமையாக இருந்தால், அதை பள்ளியில் தன் தவறான நண்பர்களோடு தைரியமாகச் செய்வார்கள். இது இன்றைக்குப் பள்ளியில் நடக்கிறதா இல்லையா? தமிழகமே குடியில் மிதந்தால், பள்ளி மட்டும் எப்படித் தப்பும்?
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் விளையாட்டுக்குத் தடை விதிக்கும் பெற்றோர்கள், பள்ளிகள் எத்தனை? விளையாட்டில்தான் தோல்விக்குப் பின் வெற்றி கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற தத்துவம் புரியும். இந்த அனுபவத்தை அவர்களுக்கு நாம் மறுத்தால், பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் எப்படி வரும்? தோல்விக்கு ஒரு வழிதான்; ஆனால் வெற்றிக்கு ஆயிரம் வழிகள் என்பதை உணர வேண்டும்.
தோல்விக்கு இயற்கையான எதிர்வினைதான் ஏமாற்றம். ஆனால் ஏமாற்றத்தைத் தாங்கமுடியாத, தாங்கி மீண்டெழும் வழிமுறையை சிறு வயதில் கற்றுணராத பிள்ளைகள் எதிர்வினையாகச் செய்யும் செயல்கள், மீண்டும் ஏமாற்றத்திற்கும், தோல்விக்கும் வித்திடுகின்றன. ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் குழந்தைகள், தங்களது முயற்சியைக் கைவிடுகிறார்கள். சுலபமாக எல்லாவற்றையும் கைவிட்டு ஒதுங்கச் சொல்கிறது மனது. தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அது புது முயற்சியை முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டையாக மாறுகிறது. ஏமாற்றத்தைச் சந்திக்கும் குழந்தைகளை, சமாதானப்படுத்தக் கூடாது; ஏமாற்றம்தான் வாழ்க்கையின் வெற்றிக்கான ஆதாரம்.
இன்றைக்கு ஒருவழிப் பாதையாகிப்போனது ஆசிரியர்களின் நிலை. ‘‘தவறு செய்திடும் மாணவனை கடுகளவுகூட தடுத்திட முற்படாதே. தன் செயலுக்கான விளைவை தானாகவே தாங்கிக்கொள்ளட்டும். முள் என்று தெரிந்தும் மிதித்திடும் இளம் வயதினரை மறந்தும்கூட முறைத்துவிடாதே; கத்தியால் குத்தினாலும், கற்றுக்கொடுக்கும் பணி தவிர யாரையும் திருத்த முயற்சிக்காதே’’ என்கிறது அரசாணை.
ஆசான் இல்லா நாடு, அரை நிர்வாண நாடாகுமே. அரசாங்கம் ஆசானை அந்நியர்களாக்கியது; அக்கிரமம் அனுதினமும் அரங்கேறியது. ஆசானை, சீதைக்கான கோட்டுக்குள் நிற்கச் செய்தது அரசு; சமுதாயம் கேலிக்கூத்தாகியது. ஆசானை ஓரங்கட்டியது அரசு; உலகம் உறையும் அளவு உக்கிரம் பல்கிப்போனது. எங்கோ ஒரு சில தவறுகள் பள்ளியில் ஆசிரியரின் கண்டிப்பில் மாணவன் பாதிக்கப்பட்டு விபரீதம் நடந்தால், அதை சட்டப்படி நடவடிக்கை எடுத்து திரும்பவும் வராமல் பார்க்கத் தெரியாததினாலும், ‘‘பாராட்டும்போது வெளிப்படையாகப் பாராட்டு, கண்டிக்கும்போது தனியாக அழைத்துக் கண்டி’’ என்று ஆசிரியரை அறிவுத்தத் தெரியாத அரசு, ‘‘கண்டிக்காதே, திட்டாதே, அடிக்காதே’’ என்று சட்டம் போட்டு ஆசானை அரசாணைக்குள் அடக்கியது. அறிவுக்கான பாதை மறந்து, தவறு செய்யும் தாழ்வு மனப்பான்மை கொண்ட, தன்னம்பிக்கையற்ற மாணவர்கள் கூட்டம் உருவாகியது.
எப்படித் தேட வேண்டும், கற்றுணர வேண்டும் என்று கற்றுக் கொடுக்கத்தான் ஆசிரியர்கள். பாடம் மட்டும் நடத்துபவர் ஆசிரியர் அல்ல. ஒரு மாணவனிடம் என்ன தனித்திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து வெளியே கொண்டுவருபவர்தான் நல்லாசிரியர். இந்த நிலையைப் பள்ளியில் கொண்டுவராவிட்டால், பள்ளிக்கல்வி சுமையாகத்தான் இருக்கும். எல்லா உயர்படிப்புக்கும் நுழைவுத் தேர்வென்றால், மனப்பாடத்தை மட்டும் மையமாகக் கொண்ட பொதுத்தேர்வு எதற்கு? மாணவர்கள் புரிந்து படித்தால், ஆண்டு முழுதும் தொடர்ந்து தேர்வு எழுதும் முறை வந்தால், கல்விச்சுமை குறையும், பள்ளிப் படிப்பு இன்பமாக மாறும்.
எனவே, வருங்கால சமுதாயத்தின் எதிர்காலம் நமது குழந்தை வளர்ப்பில் உள்ளது. அவர்களது நம்பிக்கை, தரமான கல்வியைப் பண்போடு கற்றுக்கொடுத்து தன்னம்பிக்கை கொடுக்கும் ஆசிரியர் இடத்தில். அதைச் செயல்படுத்துவது அவர்கள் படிக்கும் பள்ளியில். இதை எல்லாம் சரியாகச் செய்வது, நம் எதிர்கால சந்ததிக்கு நம்பிக்கை கொடுக்கும் நல் ஆட்சியில். அதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ஒரு விரல் மையில் இருக்கிறது.
உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com
(தொடரும்)