யதி

93. சிலுவை

பா. ராகவன்

நாம் ஹரித்வாருக்குப் போகலாம் என்று குரு சொன்னார். அந்த வருடம் மகா கும்பமேளா நடக்க இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே குரு அநேகமாக தினம் ஒருமுறையாவது அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மனக்கட்டமைப்புக்கு கும்பமேளாவைப் போன்ற விழாக்கள் எவ்வாறு கவனம் ஈர்க்கின்றன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் போக வேண்டும், போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆசிரமத்துக்கு அவ்வப்போது வந்து போகும் ஒரு சலூன் கடைக்காரரிடம் சொல்லி எங்கள் ஐந்து பேருக்கும் ரயில் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து எங்கள் உணவு முறையில் அவர் சில மாற்றங்கள் செய்தார். காலையில் ஏதேனும் ஒரு கீரை மட்டும் சாப்பிட வேண்டும். இரவு வால்நட் ஒரு பிடி. எதற்கு இப்படி என்று கேட்டேன். ‘ஹரித்வாரில் தங்கியிருக்கும் நாள்களில் நமக்கு உணவின் நினைவே வரக் கூடாது’ என்று சொன்னார்.

‘கருடன் எடுத்துச் சென்றபோது சிந்திய அமுதத் துளியைக்கூட நினைக்கக்கூடாதா?’

‘ஆம். அதையும்தான்’.

‘அப்படியானால் நம் பயணம் சுவாரசியமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னேன்.

நாங்கள் ஹரித்வாருக்குச் சென்று சேர்ந்தபோது, புவியெங்கும் தலைகளும் உடல்களும் கால்களுமாக இருந்தன. எங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைந்து திரிந்துகொண்டே இருந்தார்கள். பத்துப் பேருக்கு ஒருவர் சன்னியாசியாக இருந்தார். நீண்ட தாடியும் சடாமுடியும் காவி உடுப்பும் அணிந்து யார் யாரோ எங்கெங்கோ போனபடியும் வந்தபடியும் இருந்தார்கள்.

‘குருஜி, நாம் எங்கு தங்கப் போகிறோம்?’ என்று என் நண்பர்களுள் ஒருவன் கேட்டான்.

‘எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இந்நகரமே ஒரு விடுதிதான்’ என்று குரு சொன்னார். பத்து நிமிடங்கள் நடந்தபோது அது உண்மைதான் என்பது புரிந்துவிட்டது. பார்த்த இடங்களில் எல்லாம் மனிதக் கூட்டம் முண்டியடித்தது. நடந்து போகிறவர்களைப் பொருட்படுத்தாமல் நடுச் சாலையிலேயே பல பேர் அமர்ந்து அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தார்கள். அதனை ஓர் இடைஞ்சல் என்று வாகன ஓட்டிகள்கூடக் கருதவில்லை. சுற்றிக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்றார்கள். ஒவ்வொரு மரத்தடியிலும் நூறு பேர் இருந்தார்கள். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் படுத்து உறங்கிக்கொண்டும் சிவநாமம் உச்சரித்துக்கொண்டும் இருந்தவர்களைப் பார்த்துக்கொண்டே நாங்கள் நடந்தோம்.

‘விமல், உனக்கு ஒன்று தெரியுமா? யோகிகள் இந்தக் கும்பமேளாவைத் தவற விடுவதேயில்லை. இந்நாள்களில் ஒவ்வொரு இரவும் அவர்கள் எங்கெங்கிருந்தோ இங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆண்டுக்கணக்கில் பேசாமல் சேர்த்து வைத்திருப்பதையெல்லாம் பேசி விவாதித்துவிட்டு விடியும் நேரம் மாயமாகிவிடுவார்கள்’.

‘அப்படியா?’

‘ஆம். இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு கும்பமேளாவில் நான் இயேசுவைப் பார்த்தேன்’.

நான் திடுக்கிட்டுப் போனேன். ‘யாரைப் பார்த்தீர்கள்?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘சொன்னேனே. இயேசுவைப் பார்த்தேன்’.

இதை நம்புவதா, வேண்டாமா என்று எனக்கு ஐயமாக இருந்தது. இயேசு இந்தியாவுக்கு வந்திருக்கிறார் என்று நம்பிச் சொல்லும் ஒரு சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இயேசுவை இங்கே கும்பமேளாவில் பார்த்தேன் என்று சொல்லும் ஒரு மனிதரை எப்படி வரையறுப்பது?

‘நீ நம்ப வேண்டும் என்பது எனக்கு முக்கியமில்லை. ஆனால் பார்க்காத ஒன்றை நான் பார்த்ததாகச் சொல்லுவதில்லை’ என்று குருஜி சொன்னார்.

‘தவறாக நினைக்காதீர்கள். சட்டென்று ஒரு தேவதைக் கதையுலகத்துக்குள் நுழைவது போலிருக்கிறது’.

‘ஆம் அப்படித்தான் இருக்கும். ஆனால் இது நடந்தது’ என்று குரு சொன்னார்.

அந்தக் கும்ப மேளாவுக்கு அவர் தனியாகத்தான் சென்றிருக்கிறார். இப்போதாவது ரயிலில் சென்று வர டிக்கெட் எடுத்துத் தர ஆள் இருந்தது. அந்நாள்களில் அவருக்கு அம்மாதிரியான உதவிகள் செய்யவும் யாருமில்லை. கும்பமேளா தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அவர் மடிகேரியில் இருந்து கால் நடையாகவே புறப்பட்டுப் போயிருக்கிறார். தேவக்கோட்டையைச் சேர்ந்த யாரோ நடத்திவந்த தரும சத்திரம் ஒன்றில் தங்கியிருக்கிறார். தமிழர்கள் நடத்திவந்த சத்திரம் என்பதால் சப்பாத்தியுடன் அவருக்குச் சிறிது சாதமும் கிடைத்திருக்கிறது. சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு அவர் கும்பமேளா பார்ப்பதற்காகக் கிளம்பிப் போனார்.

நாளெல்லாம் கங்கைக் கரையில் சுற்றித் திரிந்துவிட்டு, இருட்டிய பின்பு சத்திரத்துக்குத் திரும்ப நினைத்தவரால் முடியாமல் போனது. தாங்க முடியாத அளவுக்குக் கால்வலி. மாதக்கணக்கில் நடந்தே ஹரித்வாருக்கு வர முடிந்தவரால், அன்றைய ஒரே ஒருநாள் அலைந்த களைப்பைத் தாங்க முடியாமல் போய்விட்டது. கங்கைக் கரையிலேயே படுத்துவிட்டார். படுத்தபோது அவர் நேரம் பார்க்கவில்லை. விழிப்புத் தட்டியபோதும் மணி என்னவென்று தெரியவில்லை. ஆனால் கண் விழித்தபோது அவர் அருகே யாருமில்லை. லட்சக்கணக்கில் கூடி நின்ற மக்கள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்? இந்த ஹரித்வாரில் அப்படிச் சட்டென்று ஓடி ஒளிந்துகொள்ளவும் இடம் இருக்கிறதா என்ன?

அவருக்கு விநோதமாக இருந்தது. உண்மையிலேயே அவர் இருந்த ஆற்றங்கரையில் அப்போது ஒரு மனித முகம்கூட இல்லை என்று குருநாதர் சொன்னார். குளிர் ஒரு திருடனைப் போல உடலுக்குள் ஊடுருவி சிலிர்ப்புறச் செய்துகொண்டிருந்தது. அதன் வீரியத்தைச் சற்று மட்டுப்படுத்தும் நோக்கில் அவர் ஒரு மூச்சுப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்கள் ஓடியிருக்கும். சட்டென்று மூடிய கண்ணுக்குள் மின்னலைப் போன்ற ஓர் ஒளிப்படலம் உதித்தது. குருநாதர் கண்ணைத் திறந்துவிட்டார். எதிரே சுழன்று ஓடிக்கொண்டிருந்த நதியின் வெகு தொலைவில் அந்த ஒளி உற்பத்தியாகிக்கொண்டிருந்தது. சூரிய உதயத்தைப் போன்ற ஒளியாக அது இல்லை. கண்ணை உறுத்தக்கூடிய மஞ்சள் நிற ஒளி. வடிவம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தீயின் நாக்கைப் போல எழுந்து நின்ற ஒளி. அந்த ஒளிப் பாளம் மெல்ல மெல்ல அங்கிருந்து நகர்ந்து கரையை நோக்கி வரத் தொடங்கியதை குரு பார்த்தார். அவருக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அது தன் பிரமையாக இருக்கும் என்று நினைத்தார். ஒருவேளை தான் இன்னமும் உறக்கத்துக்குள்ளேதான் இருக்கிறோமோ என்ற ஐயம் வந்ததும் தன் உச்சந்தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துப் பார்த்தார். வலித்தது. எனவே தான் உறங்கவில்லை என்பது தெரிந்தது. அப்படியானால் கண்ணில் தென்படும் ஒளிப்பாளம் உண்மைதானா? அது என்ன? எங்கிருந்து, எதற்கு வருகிறது?

ஆர்வம் அதிகரிக்க, குருஜி எழுந்து நின்றுகொண்டார். ஒரு பாதாங்கொட்டை வடிவத்தில் இருந்தது அந்த ஒளி. இன்னொரு பார்வையில் ஏதோ பாய்மரக் கப்பல் போவது போலவும் தோன்றியது. ஆனால் அது கரையை நோக்கித்தான் வருகிறது என்பதில் சந்தேகமில்லை. என்னவாயிருக்கும் என்று அறியும் ஆவலில் அவர் குளிரையும் உறக்கத்தையும் மறந்தார். கரையோரம் இருந்த ஒரு மரத்தின் பின்னால் சென்று நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தார்.

புறப்பட்ட நேரத்துக்குப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த ஒளிப்பாளம் கரையை வந்தடைந்தது. நீர்ப் பரப்பின் எல்லை வரை ஒளியாகவே தெரிந்தது, கரையைத் தொட்டதும் புகை மண்டலமாகிவிட்டது. குருநாதர் பயந்துபோனார். என்ன, என்ன என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு உற்றுப் பார்க்கத் தொடங்கினார். இருளில் அந்தப் புகை மண்டலம் மெல்ல மெல்லக் கலைந்து நகரத் தொடங்கவும் அங்கே மூன்று யோகிகள் நிற்பதை அவர் கண்டார். இயேசுவைத் தவிர அவருக்கு மற்ற இரண்டு பேரையும் அடையாளம் தெரியவில்லை. தன்னால் அடையாளம் காண முடிந்த அந்த ஒருவர் இயேசுதானா என்று திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்தார். தனக்கு ஏன் அவர் இயேசுவாகத் தோன்றுகிறார் என்றும் எண்ணிப் பார்த்தார். இயேசுவுக்குப் புகைப்படமெல்லாம் இல்லை. யாரோ வரைந்த படங்கள். யாரோ செதுக்கிய சிலைகள். திருவள்ளுவரைப் போல மனத்தில் நிலைத்துவிட்ட கற்பனை உருவம்.  அந்த உருவம் தெரிவதனாலேயே அது இயேசுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்ன கட்டாயம்?

குருநாதர் தான் கண்ட காட்சியை நம்பவே முடியாமல் இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த மூன்று யோகிகளும் கரையில் நின்று சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் புகை மண்டலமாகிவிட்டார்கள். புகை தண்ணீருக்குள் திரும்பவும் இறங்கியபோது ஒளிப் பாளமாகி நகர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அது மறைந்தும் போனது. ஒரு சம்பவத்தின் சாட்சியாகத் தன்னை நிறுத்திய இயற்கையை அவர் எண்ணிப் பார்த்தார். சந்தேகமின்றி அது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான். வாழ்வில் என்றுமே மறக்க முடியாததும்கூட.

நெடுநேரம் தான் கண்ட காட்சியை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்த குருநாதர், மெல்ல தான் மறைந்து நின்றிருந்த மரத்தடியில் இருந்து வெளிப்பட்டார். அவர்கள் நின்று பேசிவிட்டுச் சென்ற இடத்துக்கு வந்தார். ஒரு வாசனை. அல்லது ஏதேனும் ஒரு அடையாளம். ஒரு கால் தடம். என்னவாவது தனக்குக் கிடைக்கும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. நதிக்கரை எப்போதும் போலிருந்தது. நதியின் ஓட்டமும் இயல்பாகவே இருந்தது. குளிர்க்காற்று இப்போது உறைக்க ஆரம்பித்திருந்தது. பரவச நிலையில் குருநாதர் குனிந்து அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளினார்.

அள்ளி எடுத்த மண்ணில் சிறியதொரு சிலுவை இருந்தது என்று சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT