அக்ரஜன் என்பவன் இறந்து போனபின் மறு உலகத்தை அடைந்தான். அவன் சென்ற அந்த மறு உலகத்தில் அவனுக்கென்று விசாலமான அறை இருந்தது! அதில் ஆடம்பரப் பொருட்களும் நிறைய இருந்தன. அவனுக்குப் பசி எடுத்தது! "யாரங்கே?'' என்று அக்ரஜன் கத்தினான்.
"ஐயா, என்ன வேண்டும்?'' என்று கேட்டுக்கொண்டு ஒரு பணியாள் வந்தார்.
"பசிக்கிறது!.... ஏதாவது சாப்பிடக் கொண்டு வா!'' என்றான் அக்ரஜன்.
சிறிது நேரத்தில் மணமுள்ள, சுவையான உணவு கொண்டு வரப்பட்டது! அக்ரஜன் ஆசை தீர உண்டான். எப்போதெல்லாம் பசித்ததோ அப்போதெல்லாம் உணவு சுவையுடன் வந்தது. அந்த அறையில் மெத்தையுடன் கூடிய கட்டிலும் இருந்தது. அதில் படுத்துத் தூங்கினான். தூங்கி எழுந்தவுடன் பசித்தது! மீண்டும் உணவு வந்தது! நல்ல சுவையுடன் இருந்த உணவை மீண்டும் சாப்பிட்டான்! மீண்டும் தூக்கம்!
அக்ரஜனுக்கு எல்லாம் விரைவிலேயே அலுத்துப் போய்விட்டது! நான் எதற்கும் பயன் படாதவனாக ஆகிவிட்டோமோ என்ற பயம் தோன்றியது! ஏதாவது வேலை செய்யவேண்டும் போல் இருந்தது.
சேவகனைக் கூப்பிட்டான். "எனக்கு இந்த வாழ்க்கை அலுத்து விட்டது!..... ஏதாவது வேலை செய்ய வேண்டும் போல் இருக்கிறது!.... ஏதாவது வேலை கொடேன்!'' என்றான்.
சேவகனோ, அக்ரஜனிடம், "ஐயா!..... என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்!.... இங்கே வேலை எதுவும் தாங்கள் செய்யக் கூடாது!.... அதற்கான வாய்ப்பும் இங்கு இல்லை!.... உங்களுக்குப் பசித்த போதெல்லாம் உணவு தருவதே இங்கு முடியும். உணவு!..... தூக்கம்!.... இவை தவிர தாங்கள் இங்கு ஏதும் செய்ய இயலாது!....''
அக்ரஜனுக்குக் கோபம் வந்துவிட்டது!
"என்னால் இந்த சலிப்பான வாழ்க்கையைத் தாங்கவே முடியவில்லை!.... ஏதாவது சிறு வேலையாவது எனக்குக் கொடு!''
"ம்ஹூம்!.... அதற்கான வாய்ப்பே இங்கே இல்லை ஐயா!''
"இப்படிப்பட்ட இடம் எவ்வளவு சுகமாக இருந்த போதிலும் எனக்கு வேண்டாம்!.... என்னால் இதைத் தாங்க முடியவில்லை!.... இதைவிட என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்!'' என்றான் அக்ரஜன் கோபத்தோடு!
சேவகன், அக்ரஜனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, "ஐயா!..... தாங்கள் இதுவரை எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?.... இதுவே தாங்கள் கேட்ட அந்த நரகம்!''
உழைப்பு இன்றி உண்பதும், உறங்குவதும், சும்மா இருப்பதும் நரகம் என்பதை உணர்ந்தான் அக்ரஜன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.