ஆற்றிலேயே தொடர்ந்து குப்பை கொட்டும் பேரூராட்சி!
திருக்கோவிலூர், ஆக. 28: திருக்கோவிலூர் நகரத்தில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் கொட்டி பாழ்படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம். இந்நகரத்தில் புகழ்பெற்று விளங்கும் உலகளந்த
திருக்கோவிலூர், ஆக. 28: திருக்கோவிலூர் நகரத்தில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் கொட்டி பாழ்படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம்.
இந்நகரத்தில் புகழ்பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டானேஸ்வரர் கோயில், கபிலர் குன்று, ஸ்ரீரகோத்தம சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மத்தியில் பெருமை சேர்க்கின்ற வகையில் தென்பெண்ணை ஆறு உள்ளது.
கோயில்கள் அதிகம் கொண்ட இந்நகரத்துக்கு நாள்தோறும் தமிழகத்தில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் நகரத்தில் சேரும் குப்பைகளை நகரத்தையொட்டி உள்ள தென்பெண்ணை ஆற்றில் காலம் காலமாக பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு தென்பெண்ணை ஆற்றில் இந்தக் குப்பை மேடு காட்சியளிக்கிறது. லேசான காற்று வீசினால் குப்பைக் கழிவுப் பொருள்கள் காற்றில் பறக்கிறது.
இதையடுத்து நகரத்துக்கு அப்பால் குடியிருப்புகள் இல்லாத இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் திருக்கோவிலூருக்கு மிக அருகில் கனகனந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு பேரூராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கப்பட்டது. ஆனால் இங்கு எப்போதாவது மட்டுமே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மாறாக தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றிலேயே குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் கொட்டி வருகின்றனர்.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்து வருவதுடன், அவ்விடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருவதும் நாளுக்குநாள் தொடர்கிறது. மேலும் பன்றிகளின் கூடாரமாக இந்த இடம் இருப்பதால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்த் தாக்கதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்க, நோயின் பிடியில் இருந்து மக்களை காத்திட, ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.