மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியி்ல் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் இருந்து 60 வீரர், வீராங்கனைகள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 35 முதல் 100 வயது வரையிலான மூத்தோர்களில் ஆண்கள், பெண்களுக்கு தலா 13 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 20 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 80 பேர் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்றவர்களில் 60 பேர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
45 முதல் 65 வயது வரையிலான போட்டிகளில்தான் பெரும்பாலானவர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். 80 வயதுக்கு மேலான பிரிவுகளில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 1,500 மீ ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றனர்.
உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல், 5,000 மீ ஓட்டம், 10,000 மீ ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளிலும் யாரும் பங்கேற்கவில்லை. 2010-ம் ஆண்டு ஆசிய அளவிலான மூத்தோர் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஏ.விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரி ஏ.சண்முகசுந்தரி ஆகியோர் பெண்கள் பிரிவு போட்டிகளில் பங்கேற்று மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு, மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதியானவர்களுக்கு ஈரோடு மாவட்ட மூத்தோர் தடகளச்சங்கத்தின் தலைவர் எம்.கோவிந்தராஜ், செயலர் ஏ.வெங்கடாசச்சலபதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.