சிதம்பரத்தில் பஸ்நிலைய வியாபாரிகள் 2வது நாளாக கடை அடைப்பு
சிதம்பரம் தந்தை பெரியார் பஸ் நிலைய வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற
சிதம்பரம் தந்தை பெரியார் பஸ் நிலைய வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். புதன்கிழமை 2-வது நாளாக பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
தமிழகஅரசு சுற்றுலா பகுதியாக சிதம்பரம் நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் அருகே அரசு காமராஜர் மருத்துவமனை உள்ளது. தினந்தோறும் இரவு, பகலாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறக்கக்கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளதை கண்டித்து இந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இரவு 11 மணிக்கு மேல் சென்னை, திருச்சி, சேலம் மார்க்கமாக சிதம்பரம் பஸ்நிலையத்திலிருந்து சுமார் 96 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைகளை மூடச்சொல்வதால் பஸ் நிலையம் இருள் சூழ்ந்தும், சுற்றுலா பயணிகள் மற்றும் பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் டீ, காபி கூட குடிக்க முடியாமல் அவதியுறும் நிலை உள்ளது. அண்மையில் காவல்துறையினர் வியாபாரிகளை தகாத வார்த்தையால் திட்டி கடைகளில் இருந்த மின்விளக்குகளை மற்றும் கடைகளில் இருந்த பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவகத்தில் வியாபாரிகள் கடைஅடைப்பு குறித்து அமைதிக் கூட்டம் உதவி ஆட்சியர் எல்,சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.