ஈரோட்டில் 27 குழந்தைத் தொழிலாளர்கள் உள்பட 90 கொத்தடிமைகள் மீட்பு
ஈரோட்டில் கருங்கல் பாளையம் பகுதியில் பாலாஜி லேஅவுட்டில் செயல்படும் நூற்பாலை ஒன்றில் மொத்தம் 90 தொழிலாளர்கள்
ஈரோட்டில் கருங்கல் பாளையம் பகுதியில் பாலாஜி லேஅவுட்டில் செயல்படும் நூற்பாலை ஒன்றில் மொத்தம் 90 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்த நூற்பாலையில் 27 குழந்தைத் தொழிலாளர் வேலை செய்வதாக வந்த தகவலை அடுத்து, ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் நேரில் சென்று ஆய்வு செய்து, 27 குழந்தைத் தொழிலாளர்களையும் மீட்டார்.
அப்போதுதான் இந்த நூற்பாலை உரிமம் பெறாமல் இயங்கி வருவது தெரிந்தது. மேலும், 63 பேர் கொத்தடிமைகளாக இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் கொத்தடிமைகளாக இந்த ஆலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டாஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், ஓசூர், ராயக்கோட்டை இந்தப் பகுதிகளில் இருந்தும் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். முன்பணமாக பத்தாயிரம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது. தகவல் கேள்விப்பட மேயரின் அதிரடி சோதனையைத் தொடர்ந்து அவர் அளித்த தகவல் பேரில், டி.ஆர்.ஓ. கணேஷ், தொழிலக அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், அனைவரும் இந்த இடத்துக்கு வந்து, நூற்பாலையில் மேற்கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.