கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும்: நடிகை ரம்யா
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்று நடிகை ரம்யா நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்று நடிகை ரம்யா நம்பிக்கை தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் இன்று நடைபெற்ற தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்துவரும் அவர் மேலும் கூறியது: ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக அரசியலில் ஈடுபடவில்லை. மக்களுக்கு சேவை ஆற்றுவதுதான் என் நோக்கம். அதற்காகவே அரசியலில் தீவிரம் காட்டிவருகிறேன்.
Advertisement
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு சிறந்த வாய்ப்பு அளிப்பதால், இக்கட்சியில் இணைந்து பணியாற்றிவருகிறேன். இந்திய அரசியலில் ராகுல்காந்திக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. எதிர்க்கட்சித்தலைவர்களை போல பேச்சுத்திறமை இல்லாவிட்டாலும், மக்களை ஈர்க்கும் ஆற்றல் ராகுல்காந்தியிடம் இருக்கிறது. ஒருமித்த கருத்து கொண்டவர்கள் இணைந்து மக்கள் சேவை ஆற்ற முடியும். அப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள்.
சோனியாகாந்தி மீது எப்போதும் ஈர்ப்பு இருந்ததுண்டு. சோனியாகாந்தி, ஜெயலலிதா போன்ற பெண்கள் அரசியலில் வெற்றிபெறும்போது பெருமிதப்படுவேன். மக்களின் இன்னல்களை, சிக்கல்களை அறிந்துள்ளேன்.
கட்சி வாய்ப்பு அளித்தால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன். அதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு ராஜயோகம் இருப்பதாக ஜோதிடர்கள் ஆரூடம் கூறியிருக்கிறார்கள்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113-120 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும். அறுதிபெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக ஆட்சியில் கர்நாடகம் இழந்த பெருமைகளை காங்கிரஸ் ஆட்சி மீட்டெடுக்கும். குடிநீர், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு புதிய அரசு பாடுபட வேண்டும் என்றார்.