தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்பதை ஜெயலலிதா நிருபித்துள்ளார்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பல்கலைக்கழகமாக மாற்ற தமிழக சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வந்ததன் மூலம் தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிருபித்துள்ளார் என பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராக 1981-ம் ஆண்டு முதல் அப்போதை ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எல்.சிதம்பரம் தலைமையில் சுதந்திர போராட்டத்தை தொடங்கினோம். தொடர்ந்து ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. இணைவேந்தர் எம்ஏஎம்.ராமசாமியை நீக்க வேண்டும் என போராட்டத்தை நடத்தி வந்தோம். பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக முதல்வர் சட்டமாற்றம் கொண்டு வந்தது முந்தைய அரசுகள் செய்யாத ஒரு துணிச்சலான வரலாற்று சிறப்புமிக்க செயலாகும். மிகப்பெரிய தொழிலதிபரும், ஜாம்பவானுமான எம்.ஏ.எம்.ராமசாமியை எதிர்த்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் அவர் தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்பதை நிருபித்துவிட்டார்.
பல்கலைக்கழகத்தின் 12500 ஆசிரியர்கள், ஊழியர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து கட்சியினருக்கும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர்களுக்கும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ கட்சியைச் சேர்ந்த குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் பொனனுபாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரலாறு மாற்றத்தை தொடங்கி வைத்த பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல்கலைக்கழகத்தின் 12500 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழக முதல்வர் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றியமைக்க உத்திரவிட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளார். எனவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைக்கழக வளர்ச்சி நிதி என்ற பெயரில் அனுமதி சேர்க்கை, பணி நியமனம் மூலம் இணைவேந்தரால் 7585 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை அவரிடமிருந்து வசூலித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கணக்கில் வரவு வைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.மதியழகன் தெரிவித்தார். அப்போது பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.