திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி மதிமுக.,தான்: வைகோ பேச்சு
தமிழகத்தில் மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மதுவின் பிடியில் இருந்து இவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். மதுவின் தீமைகளை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி மதிமுக தான் என்று மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ கூறினார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மதுஒழிப்பு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மதுவின் பிடியில் இருந்து இவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். மதுவின் தீமைகளை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
கணவர்கள் எவ்வளவு தீங்கு இளைத்தாலும் பெண்கள் குறை சொல்லமாட்டார்கள். ஆனால், குடும்பமே மதுபானத்தால் அழிவதை கண்டு பெண்கள் குறைகூறுகின்றனர்.
எனவே, மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
திமுக, அதிமுகவுக்கு உண்மையான மாற்று மதிமுக தான் என இளைஞர்கள் எண்ணுகின்றனர். அனைத்து கட்சிகளும் விடுதலைப்புலிகளை எதிர்த்த நேரத்தில் தீவிரமாக ஆதரித்தது மதிமுகதான். தனி மனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பிரபாகரன்.
2009-ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு மத்திய அரசுதான் காரணம். தனி ஈழத்தை எனது வாழ்நாளில் நிச்சயம் காண்பேன் என்றார்.
பொதுக்கூட்டத்தில் மதிமுக துணைப்பொதுச்செயலர் மல்லை சத்யா, கொள்கை விளக்க அணி செயலர் அழகுசுந்தரம், ஈரோடு மாவட்ட மதிமுக செயலரும், மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அ.கணேசமூர்த்தி, சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன், மொடக்குறிச்சி ஒன்றியச்செயலர் சண்முகம், ஈரோடு நகர செயலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.