முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் நடைப் பயிற்சி சென்ற வழக்குரைஞர் வெட்டிக் கொலை

சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள பிரட்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ஆர்.இளம்வழுதி (45).இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு பரத் (12), சரத் (6) என்ற இரண்டு

Updated On : 5 ஆகஸ்ட், 2013 at 7:43 PM
பகிர்:

சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வழக்குரைஞர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள பிரட்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ஆர்.இளம்வழுதி (45).இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு பரத் (12), சரத் (6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளம்வழுதி தினசரி காலை 5 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்சியர் அலுவலகம் வழியாக நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வினோத் (28) என்பவர், ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் கால்நடை மருத்துவமனைக்கு நேர் எதிரே ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.உடனடியாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களை சந்தித்து தகவலைத் தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் நகர காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் இளம்வழுதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து இளம்வழுதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் மாநகர காவல் ஆணையர் கே.சி.மஹாலி, துணை ஆணையர்கள் ஏ.ஜி.பாபு, பிரபாகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்து இளம்வழுதியின் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.முதல்கட்ட விசாரணையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இளம்வழுதியின் மீது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இளம்வழுதியின் நெற்றியில் இடது கண்ணுக்கு மேல் ஆழமாக ஒரு வெட்டுக் காயமும், பின் மண்டையில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்துள்ளன. இதனால் அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

Advertisement

இதையடுத்து இளம்வழுதியின் சகோதரர் இளங்கோவன் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தனது சகோதரரை மர்ம நபர்கள் படுகொலை செய்திருப்பதாக அவர் அளித்த புகாரின் பேரில், இளம்வழுதியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இதற்கிடையே வழக்குரைஞர் இளம்வழுதியின் மரணம் குறித்து அறிந்ததும் சேலம் வழக்குரைஞர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். மேலும் சம்பவம் நடைபெற்ற ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட இளம்வழுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாத இதழ் ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அதிமுகவிலும் இருந்துள்ள இவர், இப்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் வழக்குரைஞர் தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகே கடந்த 1994-ம் ஆண்டு ஆட்டோ பாலன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இளம்வழுதி, பின்னர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.