முகப்பு
தற்போதைய செய்திகள்

இளவரசன் தற்கொலை தொடர்பான விசாரணை தொடக்கம்

தருமபுரியைச் சேர்ந்த இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை இன்று காலை முறைப்படி தொடங்கியது. தருமபுரி சுற்றுலா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வ

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:09 PM
பகிர்:

தருமபுரியைச் சேர்ந்த இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை இன்று காலை முறைப்படி தொடங்கியது. தருமபுரி சுற்றுலா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசாரணை அறையில், நீதியரசர் சிங்காரவேலு விசாரணையைத் தொடக்கினார். இருதரப்பு நபர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.

முன்னதாக அவருக்கு மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நீதியரசர் பேசினார். அப்போது, விசாரணை ஆணையம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதுவரை 27 மனுக்கள் வந்துள்ளன. இதுவரை 20 தபால் மூலம் பெறப்பட்டுள்ளன. இன்று 7 பேர் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராமநிர்வாக அலுவலர், மாவட்ட காவல் அதிகாரி, பிரேதப் பரிசோதனை செய்த தருமபுரி மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த விவரங்களை எடுத்துக்கொள்வோம். ஆனால் அப்படியே எடுத்துக் கொள்ள மாட்டோம். இவர்கள் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டு, தனிப்பட்ட முறையில் இந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தும். தேவையிருப்பின் சம்பவம் நடந்த்க இடத்துக்குச் சென்று விசாரணை நடத்துவோம். மேலும், ரயில்வே துறையில் விசாரணை நடத்துவோம். ரயில் இஞ்சின் ஓட்டுநர், பாதை பராமரிப்பாளர், கடைசியாக இளவரசனிடம் பேசியவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துவோம்.

முன்னதாக இருவேறு கருத்துகள் இருந்ததால், முதல்வரே தலையிட்டு உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளதால், நீதி விசாரணைக் குழு நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படும். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விவரங்களோ, அல்லது நீதிமன்றத்தின் கருத்துகளோ வழிகாட்டுதல்களோ எங்களைக் கட்டுப்படுத்தாது. இது சுதந்திரமான விசாரணை ஆணையம்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார் நீதியரசர் சிங்காரவேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.