காதல் திருமணம் செய்து கொண்ட ஏட்டு தற்கொலை; மனைவி கொலை?
திருவண்ணாமலையில் காதல் திருமணம் செய்து கொண்ட காவல்துறை ஏட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவரது மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் காதல் திருமணம் செய்து கொண்ட காவல்துறை ஏட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவரது மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தவர் குமார் (35). அவரது மனைவி கலையரசி (25). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளான். குமார் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் பின்புறமுள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில், கலையரசியின் அண்ணன் தங்கராஜ், சிலிண்டர் எடுத்துக் கொண்டு இவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். வீடு உள்பக்கமாக தாளிட்டு இருந்ததால் குமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் வெகு நேரம் அடித்தும் அதனை குமார் எடுக்கவில்லை.
அதனால் சந்தேகமடைந்த சகோதரர், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அங்கு கலையரசி இறந்த நிலையில் தரையில் கிடந்தார். அவரது உடலுக்கு நேர் மேலே சங்கிலியில் தூக்கில் தொங்கியபடி குமாரின் உடல் இருந்தது.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் குழந்தை அழுதபடி இருந்துள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், மனைவியைக் கொன்றுவிட்டு குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.