மத்திய சுகாதாரத்துறை மண்டல இயக்குனர் நிர்மல் ஜோஹி இன்று மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதி தீவிர சிகிச்சைப் பிரிவினைச் செயல்படுத்துவதற்கான மருத்துவ சாதனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
விபத்து மற்றும் காயத்துக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் விபத்து சிகிச்சைக்காக உள்ள மிகப் பெரிய மருத்துவமனையாக இது விளங்குகிறது. மாநில அரசால் ரூ.22 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசு சார்பில் முதலில் ரூ.85 லட்சம் அளிக்கப்பட்டது. தற்போது ரூ.4.4 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன சிடி ஸ்கேன் அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. மீதம் ரூ.63 ஆயிரம் மட்டும் உள்ளது.
மருத்துவமனையில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் எரிபொருள் மற்றும் ஓட்டுநர் இல்லாததால் முடங்கிக் கிடந்தது. அதுவும் மற்றும் தேவையான உபகரணங்கல் உள்ளிட்டவையும் இப்போது டீன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆகவே மருத்துவமனை செயல்பாட்டில் முழுமையாக அனைத்தும் செயல்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது என்றார் அவர்.
மருத்துவமனை டீன் டாக்டர் மோகன், உயரதிகாரிகள் மருத்துவர்கள் பிரகதீஸ்வரர், புகழேந்தி, மீனாட்சி சுந்தரம், கணேஷ்பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.