முகப்பு
தற்போதைய செய்திகள்

கட்சி தலைமை வாய்ப்பளித்தால் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டி: ஆ.ராசா

கடலூர் மாவட்ட திமுக சார்பில் கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு தலைமையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் சனிக்கிழமை

Updated On : 22 டிசம்பர், 2013 at 3:56 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:53 AM

கட்சி தலைமை வாய்ப்பளித்தால் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.

கடலூர் மாவட்ட திமுக சார்பில் கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு தலைமையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.   கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியதாவது: 

திமுக பொதுக்குழு கூட்டத்தில் மத்தியில் வரப்போகிற அரசு மதச்சார்பற்ற அரசாக, தமிழ் இனத்துக்கு விரோதம் இல்லாத அரசாக அமைய வேண்டும் என்றுதான் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோமே தவிர, திமுக சார்பில் யார் பிரதமராக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை.2-ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணி அமைத்து கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணி சேர முடியாது, என்றால் அதிமுகவுடன் பேசுவதற்கே தகுதி இல்லை.2-ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த நம்பவர் மாதம் 14-ஆம் தேதி விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி ராசாவிடம் ஒன்றும் இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement

நான் பதவி ஏற்றபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு, கைதானபோது எனது சொத்துக்கள் எவ்வளவு என வித்தியாசத்தை பாருங்கள். சொத்துக்கள் அதிகரித்து இருந்தால், வழக்கை நிறுத்திவிட்டு 10 ஆண்டுகள் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். நான் செய்தது 3 தவறுகள்தான், நிமிடத்துக்கு ரூ.1 என்று இருந்த கட்டணத்தை 30 காசுகளாக குறைத்தது, 30 கோடி பேர் பயன்படுத்தி வந்த செல்போன்களின் எண்ணிக்கையை 90 கோடியாக உயர்த்தியது, சராசரி செல்போன் கட்டணத்தை ரூ.315-ல் இருந்து ரூ.100 ஆக குறைத்தது.  கட்சி தலைமை வாய்ப்பளித்தால் மீண்டும் நான் தேர்தலில் வெற்றிபெற்று, அந்த திட்டங்களை கொண்டு வருவேன்.

காவிரி பிரச்னையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1970-ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, அதைத்தொடர்ந்து கண்காணிப்பு குழு அமைத்தது, இடைக்கால நிவாரணம் பெற்றது என அனைத்துக்கும் காரணம் திமுக ஆட்சி தான்.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதுதான் மின் தடைக்கு காரணம். திமுக ஆட்சியில் ஒரு லோடு மணல் ரூ.4,000 விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஒரு லோடு மணலின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் நாராயணன், துணைச் செயலர் பூங்காவனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.