வடலூர் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியானதாக வரலாறு கூறுகிறது
கடலூர் மாவட்டம் வடலூரில் வருகிற ஜன.27-ம் தேதி நடைபெறும் தைப்பூத ஜோதி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியானதாக வரலாறு கூறுகிறது. இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஜோதியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டு தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடுதல் பேருந்துகள் விடப்பட்டும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி கடும் அவதியுற்று வருகின்றனர். வடலூர் வழியாக கடலூர்-திருச்சி, நாகூர் பாசஞ்சர் ஆகிய ரயில்களை மட்டுமே இயக்கப்படுகின்றது. வடலூருக்கு அருகாமையில் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. எனவே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலத்திலிருந்து-விருத்தாசலம் வரை வரும் ரயிலை வடலூர் வழியாக கடலூர் வரை வருகிற ஜன.26,27, 28 ஆகிய மூன்று தேதிகள் வரை இயக்க வேண்டும் என நெய்வேலியைச் சேர்ந்த சமூகஆர்வலர் எஸ்.சகாதேவன் தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளார்.